நந்தா உள்ளே வாடா என்று கடவுள் கூப்பிடாதது ஏன்.. அவருக்கும் பாகுபாடு இருந்ததா.. சீமான் கேள்வி!
சென்னை: நடிகர் சசிக்குமார், பிக்பாஸ் புகழ் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நந்தன் படத்தின் சூட்டிங், போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து வரும் செப்டம்பர் 20ம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் நடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை பாராட்டி பேசினார். தன்னுடைய தம்பிகளுக்காக இந்த இசை வெளியீட்டிற்கு தான் வரவில்லை என்றும் இந்தப் படம் தன்னை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேச வைத்துள்ளதாகவும் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் சசிக்குமார் என்ற நடிகரை பார்க்க முடியாது என்றும் பேசியுள்ளார்.

நடிகர் சசிக்குமார்: நடிகர் சசிக்குமாரின் அயோத்தி, கருடன் படங்கள் அவரின் மீதான நம்பிக்கையை ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது. முன்னதாக சுப்ரமணியபுரம் போன்ற சிறப்பான கதைக்களங்களை கொடுத்திருந்த அவர், இடையில் அடுத்தடுத்து 7 படங்களின் தோல்வியால் கடனாளியானதாகவும் அதனால் தன்னால் தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடிக்க முடியவில்லை என்றும் தன்னுடைய பேட்டியொன்றில் கூறியுள்ளார். ஆனால் தற்போது அதை தான் கடந்துவிட்டதாகவும் அதன் விளைவே அயோத்தி, கருடன் போனற் தன்னுடைய மனதிற்கு நெருக்கமான கதைக்களங்களில் நடித்து வருவதாகவும் சசிக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
நந்தன் படம்: அந்த வரிசையில் அடுத்ததாக நந்தன் படமும் இணையும் என்றும் சசிக்குமார் பேசியுள்ளார். இந்தப் படத்தை முன்னதாக தானே தயாரிக்க நினைத்ததாகவும் ஆனால் அது முடியாமல் போனநிலையில், படத்தின் இயக்குநர் சரவணனை தயாரிக்க தான் ஊக்குவித்ததாகவும் சசிக்குமார் பேசியுள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் சிறப்பாக நடந்துள்ளது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சீமான் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

நந்தன் எரிக்கப்பட்டபோது: இந்த நிகழ்ச்சியை பாட்டு வெளியீட்டு விழாவாக பார்ப்பதை விட பல நூறு ஆண்டுகளாக இந்த மண்ணின் மக்கள் பட்ட வலியை வெளிப்படுத்தும் விழாவாகவே பார்ப்பதாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக ஒரு இனம் தூக்கி சுமக்கும் வலியை இந்தப் படத்தில் இயக்குநர் சரவணன் பதிவு செய்துள்ளதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார். நந்தன் எரிக்கப்பட்ட போது அவனின் கதறலின் சில சிதறல்கள்தான் நந்தன் படத்தின் கதையாக உள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் கனமாகவும் கவனமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சீமான் குறிப்பிட்டுள்ளார்.
இறைவனுக்கும் சாதி பாகுபாடு?: 63 நாயன்மார்களில் ஒருவரான நந்தனார் கோயிலின் வெளியில் இருந்து சிவபெருமானை தரிசிக்க முயன்றதாகவும் சிவனை மறைத்துக் கொண்டிருந்த நந்தியை சிவபெருமான் ஒதுங்க செய்து தன்னை நந்தன் தரிசிக்க வழிவகை செய்ததாகவும் வரலாறு உள்ளதை குறிப்பிட்டுள்ள சீமான், நந்தியை நகர்த்திவிட்ட சிவன், நந்தா உள்ளே வாடா என்று ஏன் கூப்பிடவில்லை என்ற கேள்வி இங்கு யாருக்கும் எழுவது இயல்புதான் என்றும் தெரிவித்துள்ளார். அப்பொழுது இறைவனுக்கும் சாதி பாகுபாடு இருந்ததா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விதான் தற்போது நந்தன் படமாக உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான நந்தன்கள்: தற்காலத்திலும் ஆயிரக்கணக்கான நந்தன்கள் இருப்பதாகவும் சீமான் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வலி புரிந்தால் நந்தன் படம் அனைவரையும் கவரும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நம்மை போன்ற சக மனிதர்கள் எப்படி ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நந்தன் படம் கதைக்களமாக கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீடு என்பது ஏன் ஏற்பட்டது, சீமான் என்பவன் ஒரு கோயிலுக்கு செல்லக்கூடாது என்பது அவர் ஏழை என்பதற்காக அல்ல அவர் தாழ்ந்த சாதி என்பதற்காகத்தான் என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











