500 படங்களில் நடித்தவர்.. பிரபல மூத்த நடிகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.. திரையுலகம் இரங்கல்!
பெங்களூரு: பிரபல மூத்த நடிகர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பது சினிமா துறையில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
உலகம் முழுவதும் மிரட்டிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இப்போது வேகமாக பரவி வருகிறது.

வைரஸ் தொற்று
இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸ் தொற்றுக்குப் பலர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான சினிமா துறையினரும் பலியாகி உள்ளனர்.

கன்னட நடிகர்
இந்நிலையில் பிரபல கன்னட நடிகர் மகாதேவப்பா, கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது கன்னட சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மூத்த நடிகரான இவர், சுமார் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரை சனி மகாதேவப்பா என்று அழைக்கின்றனர். சங்கர் குரு, கவிரத்னா காளிதாசா, ஶ்ரீ ஶ்ரீனிவாச கல்யாணா, குரு பிரம்மா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

மருத்துவமனை
கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டாரான டாக்டர் ராஜ்குமாருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்தவர். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதற்காக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இரங்கல்
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 88. இதையடுத்து ரசிகர்களும் கன்னட திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர்கள் சுதீப், புனித் ராஜ்குமார் உட்பட பல நடிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த மகாதேவப்பாவுக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











