Shivarajkumar: ரசிகர்களின் அன்பு.. இதயத்தில் வைத்திருப்பதாக நெகிழ்ச்சி தெரிவித்த சிவராஜ்குமார்!
சென்னை: நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் நடிகர் சிவராஜ்குமார். இவரது நடிப்பு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது.
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமார் சில நிமிடங்களே வந்தாலும் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தொடர்ந்து தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் மிரட்டலான கேரக்டரில் சிவராஜ்குமார் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசரில் இவரை பார்க்க முடிந்தது.

ஜெயிலர் வெற்றி குறித்து சிவராஜ்குமார் நெகிழ்ச்சி: ரஜினிகாந்த் -நெல்சன் திலீப்குமார் காம்பினேஷனில் உருவாகி கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது ஜெயிலர். இந்தப் படத்திற்கு உலகளவில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் மிகப்பெரிய ரீச்சை பெற்றுள்ளது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
விஜய்யுடனான பீஸ்ட் படத்தில் சொதப்பிய நெல்சன் திலீப்குமார், இந்தப் படத்தில் மீண்டு வந்து சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளதாக சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளார். இந்தப் படத்தில் அதிகமான நட்சத்திரப் பட்டாளங்களை வைத்து சிறப்பான திரைக்கதையை அவர் கையாண்டுள்ளார். படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் படத்தில் வசந்த் ரவி, தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் என ஒவ்வொரு மொழியிலும் ரசிகர்களை ஈர்க்கும்வகையில் நடிகர்களை பயன்படுத்தியிருந்தார் நெல்சன்.
அந்தவகையில் கன்னட ரசிகர்களை கவரும்வகையில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் சிவராஜ்குமார். இந்தப் படத்தில் அவர் சில நிமிடங்களே வந்தாலும் தன்னுடைய ஆளுமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். படத்தில் அவரது கேரக்டர் மிரட்டலாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரஜினியின் இன்ட்ரோ காட்சிக்கு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவத்தை சிவராஜ்குமார் இன்ட்ரோ சீனுக்கும் நெல்சன் கொடுத்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டது.
இதன்மூலம் கன்னட ரசிகர்களை கவர திட்டமிட்டிருந்தார் நெல்சன். அவரது கணிப்பு வீணாகவில்லை. படம் கன்னடத்திலும் மிகச்சிறந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் இந்தப்படம் மிகப்பெரிய வசூலை முதல் இரண்டு நாட்களிலேயே பெற்றுள்ளது. இந்நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் சிவராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
படத்தின் தயாரிப்பு தரப்பு, இயக்குநர் நெல்சன், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சிவராஜ்குமார், ரசிகர்களின் அன்பை தன்னுடைய இதயத்தில் வைத்திருப்பேன் என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் படத்தை வெற்றிப்படமாக உருவாக்கிய நெல்சனுக்கு அவர் ஸ்பெஷல் நன்றிகளை தெரிவித்துள்ளார். அவரது வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











