என்ன திடீர்னு எல்லோரும் ஒரே ஸ்ருதியில் பாடுறாங்க.. விவசாயிகள் போராட்டம்.. பிரபலங்களை சாடும் நடிகர்!
சென்னை: விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்து வரும் பிரபலங்களை நடிகர் சித்தார்த் சாடியுள்ளார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களுடன் மத்திய அரசு பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு ஏற்படவில்லை.

விவசாயிகள் கைது
இதனையடுத்து குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

ரிஹானா கருத்து
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான ரிஹானா, தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டு இருந்தார். டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்படுவதாக வெளியான செய்தி ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ரிஹானா, "இது குறித்து ஏன் நாம் பேசவில்லை?"என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கங்கனா பதில்
இதற்கு பதில் தெரிவித்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், " அவர்கள் பற்றி யாரும் பேசவில்லை, ஏனெனில், அவர்கள் விவசாயிகள் அல்ல. இந்தியாவை பிளவுபடுத்த முயற்சிக்கும் தீவிரவாதிகள். அமெரிக்காவை போல பிளவுபட்ட தேசத்தை சீனா தனது காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயற்சிக்கும். பொறுமையாக இருங்கள் முட்டாளே, உங்களை போல நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்" என கடுமையாக கூறினார்.

இந்திய பிரபலங்கள்
இதனை தொடர்ந்து மியா காலிஃபா உட்பட உலக பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிவிட்டினர். இதனால் டிவிட்டர் வலைதளமே ரணகளப்பட்டது. தொடர்ந்து அக்ஷய் குமார், விராட் கோலி, ரோகித் சர்மா, சச்சின் என பலரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக உலக பிரபலங்கள் கருத்து தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கவனமாக தேர்வு செய்யுங்கள்
இந்நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய பிரபலங்களின் கருத்துக்கு பிரபல நடிகரான சித்தார்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், உங்கள் ஹீரோக்களை நீங்கள் கவனமாக, அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்.

ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்
கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்து கொள்ளும் தன்மை கண்டிப்பாக தேவை. எந்த நிலைப்பாட்டிலும், எதிலும் குரல் கொடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள், இதுதான் அவர்களின் பிரச்சாரம், உங்களின் பிரச்சாரத்தை தெரிந்து கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

சித்தார்த் குற்றச்சாட்டு
நடிகர் சித்தார்த்தின் இந்த பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் கமெண்டுகள் குவிந்து வருகின்றனர். நடிகர் சித்தார்த் தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார். அண்மையில் தன்னுடைய டிவிட்டுகள் இருட்டடிப்பு செய்யப்படுவதாக சித்தார்த் டிவிட்டர் இந்தியா மீது குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











