Actor Simbu: நல்லதை பாராட்ட தூரம் தடையில்லை.. மஞ்சுமெல் பாய்சை தொலைபேசி மூலம் பாராட்டிய சிம்பு!
சென்னை: மலையாளத்தில் உருவாகி மலையாள ரசிகர்களை மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் படம். மலையாளத்தை காட்டிலும் தமிழில் இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் அதிகமாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் படம் 100 கோடி ரூபாய் கலெக்ஷனை நோக்கி வசூல் சாதனை செய்து வருகிறது. சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படத்தின் பாடல் மற்றும் குணா படத்தின் ஷூட்டிங் எடுக்கப்பட்ட குகை ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விஷயங்கள் தமிழ் ரசிகர்களை கவர்ந்து படத்தின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளது. படத்தை கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். இதனிடையே தற்போது நடிகர் சிம்புவும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் தற்போது மஞ்சுமெல் பாய்ஸ் டீமிற்கு தொலைபேசி மூலம் பாராட்டை தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகர் விஜய்யின் கோட் படத்தை இயக்கிவரும் இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபுவும் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ஹீரோயின் இல்லாமல் ஒரு படத்தை இந்த அளவிற்கு ரசிகர்கள் கொண்டாட முடியும் என்பதை மஞ்சுமெல் பாய்ஸ் படம் சாதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மஞ்சுமெல் பாய்ஸ் படம்: சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ளது மஞ்சுமெல் பாய்ஸ் மலையாள படம். இந்த படத்தை மலையாள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதை காட்டிலும் தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு அதிகப்படியான ஆதரவை கொடுத்து வருகின்றனர். தமிழகத்தின் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக மஞ்சுமெமல் பாய்ஸ் படம் ஓடி வருகிறது. இந்த படத்தின் சூட்டிங் கொடைக்கானலின் குணா குகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குகை போன்ற செட்டையும் போட்டு அதிலும் படத்தின் ஷூட்டிங்கை எடுத்துள்ளனர்.
குணா படத்தின் பாடல்: நாயகி இல்லாமல் சில இளைஞர்களை மட்டும் வைத்து ரசிகர்கள் விரும்பும் வகையில் ஒரு படத்தை கொடுக்க முடியும் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் காணப்படுகிறது. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனும், குணா படத்தின் இயக்குனர் சந்தானபாரதியும் பார்த்து மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினருடனும் உரையாடலும் நிகழ்த்தியுள்ளனர். குணா குகையில் சூட்டிங் எடுக்கப்பட்டபோது நடந்த சுவாரசியங்களை கமல்ஹாசன் இந்த சந்திப்பின்போது பகிர்ந்துள்ளார். அந்த குகையில் சிக்கி உயிரிழந்த குரங்கு குட்டிகளின் மண்டையோடுகளை எடுத்து வந்துதான் ஹேராம் படத்தில் பயன்படுத்தியதாக நடிகர் கமலஹாசன் இந்த சந்திப்பில் பகிர்ந்துள்ளார்.
சந்தானபாரதி சிலிர்ப்பு: இதேபோல குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அந்த படத்தில் இடம் பெற்ற கண்மணி அன்போடு பாடல் வெளியான போது ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததை பார்த்த தனக்கு மெய்சிலிர்த்ததாக அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இதே நெகிழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனும் உணர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கான பாராட்டுக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன. தற்போது விஜய்யின் கோட் படத்தை இயக்கி வரும் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இந்த படத்திற்கு தன்னுடைய பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு பாராட்டு: ஒரு ஹீரோயின் இல்லாமல் ஒரு திரில்லர் படத்தை ரசிகர்கள் விரும்பும் அளவிற்கு இப்படி கொடுக்க முடியுமா என்பது தனக்கு மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியதாக அவர் தனது மேடைப்பேச்சு ஒன்றில் கூறியுள்ளார். இதனிடையே வெளிநாட்டில் இருக்கும் நடிகர் சிம்புவும் தொலைபேசி மூலம் மஞ்சுமெல் பாய்ஸ் குழுவினரை தொடர்பு கொண்டு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த பாராட்டுக்களால் இயக்குனர் சிதம்பரம் உள்ளிட்ட படக் குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் உள்ளனர். ஒரு படத்திற்காக ஆபத்தான குகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்கும் தைரியம் கமல்ஹாசன் போன்ற நடிகருக்கே வரும் என்று முன்னதாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் பாராட்டு தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











