மீண்டும் தொடங்கும் மாநாடு.. சிம்புவே நடிக்கிறார்.. சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!
மாநாடு படத்தில் சிம்புவே நடிக்க இருப்பதாக சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் சிம்பு மாநாடு படத்தில் மீண்டும் நடிப்பதை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உறுதி செய்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு ஹீரோவாக நடிக்கப் போவதாக கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட படம் மாநாடு. படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் வெங்கட்பிரபு பிஸியானார். படத்தை ஆரம்பிக்க சுரேஷ் காமாட்சி தீவிரம் காட்டினார். ஆனால் சிம்புவோ அசைந்தே கொடுக்கவில்லை.
கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக சிம்புவுக்காக சுரேஷ் காமாட்சியும், வெங்கட்பிரபுவும் காத்திருந்தனர். ஆனால் சிம்பு கண்டுகொள்ளவே இல்லை. இந்த படத்திற்காக சிம்புவிற்கு தயாரிப்பாளர் முன்பணமும் கொடுத்திருந்தார். இதனால் கடும் நெருக்கடிக்கு அவர் தள்ளப்பட்டார்.

மாநாடு விவகாரம்
ஒரு காலகட்டத்தில் சிம்பு இனி வரவேமாட்டார், தன்னை ஏமாற்றுகிறார் என நினைத்த சுரேஷ் காமாட்சி, மாநாடு படத்தில் இருந்து சிம்புவை நீக்குவதாக அறிவித்தார். இயக்குனர் வெங்கட்பிரபுவும் அதை ஆமோதித்தார். சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் சுரேஷ் காமாட்சி புகார் ஒன்றையும் கொடுத்தார்.

மகா மாநாடு அறிவிப்பு
அப்போது தான் தனது நிலையை உணர்ந்தார் சிம்பு. மாநாடு படத்திற்கு போட்டியாக மகாமாநாடு எடுக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் அதுவும் அறிவிப்போடு நின்றுவிட்டது.

ப்ளூசட்டை மாறன் படம்
இதற்கிடையே பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கும் பட வேலைகளை ஆரம்பித்தார் சுரேஷ் காமாட்சி. அப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இந்நிலையில் மாநாடு பட விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. சிம்பு மற்றும் சுரேஷ் காமாட்சியை அழைத்து அவர்கள் பேசினர். அப்போது மாநாடு படத்தில் சிம்பு நடித்து கொடுப்பார் என்று உறுதி அளிக்கப்பட்டது.

ஒப்பந்தம்
ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியோ, சிம்பு உரிய நேரத்தில் படப்பிடிப்புக்கு வரவேண்டும், குறிப்பிட்ட காலத்துக்குள் படத்தை முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட உறுதிமொழி ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டால் படப்பிடிப்பை தொடங்க தயார் என்று கூறினார்.

சிம்பு கையெழுத்து
அதற்கு சிம்பு ஒப்புக்கொண்டார். தயாரிப்பாளர் கூறிய நிபந்தனை ஒப்பந்தத்தில் சிம்பு கையெழுத்திட்டுள்ளார். இதையடுத்து மாநாடு படத்தில் மீண்டும் சிம்பு நடிக்கிறார் என சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார். இது சோர்வில் இருந்த சிம்பு ரசிகர்களை லேசாக உற்சாகப்படுத்தியுள்ளது.

படவேலைகள்
எனவே விரைவில் மீண்டும் மாநாடு பட வேலைகளை படக்குழு ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. சிம்பு தவிர முன்பு அறிவித்த அதே நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களே இப்படத்தில் இருப்பார்களா அல்லது வேறு யாரேனும் மாற்றப் படுகிறார்களா என்பது குறித்து விரைவில் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications











