Actor Simbu: விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சிம்பு.. வீட்டிற்கும் சென்று ஆறுதல்!
சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தீவுத்திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட விஜயகாந்தின் உடல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்டவர்கள் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களும் விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மறைவின்போது சூட்டிங் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்த நடிகர்கள், நடிகைகள் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டில் இருந்த நடிகர் சிம்பு தற்போது சென்னை திரும்பிய நிலையில், நடிகர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து விஜயகாந்தின் வீட்டிற்கும் சென்று பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

நடிகர் சிம்பு: நடிகர் சிம்பு, அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த சிம்பு தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் STR48 படத்தில் கமிட்டாகியுள்ளார். தேசிங்கு பெரியசாமி இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வரலாற்றுக் கதைக்களத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் படம் உருவாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகள் அதிக நாட்களை எடுத்துக் கொண்டது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் பிப்ரவரியில் சிம்பு பிறந்தநாளையொட்டி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
STR48 படம்: தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை காட்டி வருபவர் சிம்பு. சமீப காலங்களில் சிறப்பாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் STR48 படத்திற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார் சிம்பு. மேலும் மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளையும் வெளிநாட்டில் பெற்று வந்தார். இந்நிலையில் அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதையடுத்து சென்னை திரும்பியுள்ளார். படத்தில் ஹீரோ, வில்லன் என இரு கெட்டப்புக்களையும் சிம்புவே போடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மறைவு: கடந்த மாதத்தில் நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமான நிலையில் ரஜினி,. கமல், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால் சிம்பு, அஜித், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. சிம்பு, அஜித் உள்ளிட்டவர்கள் வெளிநாடுகளில் இருந்த நிலையில் விஜயகாந்த் மறைவிற்கு நேரில் வரவில்லை. ஆனால் சிம்பு விஜயகாந்த் மறைவையொட்டி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை திரும்பியுள்ள சிம்பு, விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

விஜயகாந்த் வீட்டிற்கு சென்று ஆறுதல்: மேலும் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கும் நேரில் சென்று விஜயகாந்த் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தற்போது இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகின்றன. சிம்புவின் பிறந்தநாளையொட்டி வரும் பிப்ரவரி 3ம் தேதி அவரது STR48 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்தமாதம் இறுதியில் படத்தின் சூட்டிங்கும் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











