வெந்து தணிந்தது காடு.. சூர்யா, உதயநிதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து!
சென்னை : நடிகர் சிம்பு -கௌதம் மேனன் கூட்டணியில் இன்றைய தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு படம்.
மாநாடு படத்தின் அதிரி புதிரி வெற்றியை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் இந்தப் படம் வெளியாகியுள்ள நிலையில் தற்போது இந்தப் படம் அனைத்து தரப்பினரின் பாராட்டுக்களுக்கு உள்ளாகியுள்ளது.
முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு வெற்றிகளைக் கொடுத்த சிம்பு -கௌதம் மேனன் கூட்டணி தற்போது வெந்து தணிந்தது காடு படத்தின் ஹாட்ரிக் வெற்றிக்கு அடித்தளம் போட்டுள்ளது.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு எப்போதுமே சர்ச்சைகளுக்கு உள்ளானவர். இதன்மூலம் ஏராளமான விமர்சனங்களையும் பெற்றவர். ஆனால் அவரது ரசிகர்கள் மட்டும் அவரை எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் இருந்தனர். அதற்கு தான் தகுதியானவன்தான் என்பதை தன்னுடைய படங்களின் வெற்றிகளின்மூலம் நிரூபித்து வந்தார் சிம்பு.

மாநாடு படம்
குழந்தை நட்சத்திரமாகவே சினிமாத்துறையில் கால் பதித்த சிம்பு ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னுடைய வயதுக்கு ஏற்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். சமீப காலங்களில் இவரது கதைத் தேர்வுகளில் முதிர்ச்சி காணப்படுகிறது. கடந்த ஆண்டு இறுதியில் வெளியான மாநாடு படம் இவரை 100 கோடி ரூபாய் கிளப் நாயகனாக மாற்றியது.

வெந்து தணிந்தது காடு படம்
தொடர்ந்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் சிம்பு. முன்னதாக இவர்களது காம்பினேஷனில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்களில் காதல் காட்சிகள் தூக்கலாக இருந்த நிலையில், தற்போது வித்தியாசமான கதைக்களத்துடன் இந்தக் கூட்டணி களமிறங்கியுள்ளது.

ஹாட்ரிக் வெற்றிக்கு அடித்தளம்
இந்தப் படத்தின்மூலம் ஹாட்ரிக் வெற்றியை சாத்தியப்படுத்தியுள்ளது. படம் இன்று காலை 5 மணி ஷோவிலிருந்து துவங்கிய நிலையில், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் படத்தை கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களே கிடைத்து வருகின்றன.

உதயநிதி வாழ்த்து
இந்நிலையில் நடிகர்கள் உதயநிதி மற்றும் சூர்யா உள்ளிட்டவர்களும் படத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் மேனன் இருவரும் பெரியளவில் மற்றும் சிறப்பான வகையில் வெந்து தணிந்தது காடு படம் மூலம் வந்துள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக இந்தப் படம் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான ஏஆர் ரஹ்மான் பாடல்கள்
மேலும் கௌதம் மேனனின் தனித்தன்மை ஒவ்வொரு பிரேமிலும் தெரிவதாகவும் ஏஆர் ரஹ்மான் பாடல்கள் சிறப்பு என்றும் அவர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே உதயநிதிக்கு ஐசரி கணேஷ் நன்றி தெரிவித்து பதில் ட்வீட் செய்துள்ளார்.

படம் பார்க்க சூர்யா விருப்பம்
இதனிடையே சிம்பு மற்றும் கௌதம் மேனனுக்கு நடிகர் சூர்யாவும் வாழ்த்துக்களை ட்விட்டர் மூலம் பகிர்ந்துள்ளார். வெந்து தணிந்தது காடு குறித்த சிறப்பான விமர்சனங்களை கேட்டு வருவதாகவும் விரைவில் படத்தை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பாராட்டு
சூர்யாவின் பாராட்டுக்கு நன்றி அண்ணா என்று சிம்பு பதிலுக்கு ட்வீட் செய்துள்ளார். இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனும் சிம்பு மற்றும் கௌதம் மேனனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் பாடல்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அவர், தனக்கு மறக்குமா நெஞ்சம் பாடல் மிகவும் பிடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் சிம்பு தன்னுடைய நன்றிகளை தெரிவித்துள்ளார். இதனிடையே, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் சூரி, கௌதம் கார்த்திக், அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டவர்களும் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











