முதல்முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம்.. ரஜினிக்கு நன்றி சொன்ன நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
சென்னை: படையப்பா படத்துக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து ரஜினியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன். நடிகர் திலகம், செவாலியே என ரசிகர்களால் போற்றப்படுபவர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். அப்போதும் சரி இப்போதும் சரி எப்போதும் சரி யார் நடிக்க வந்தாலும் அவர்களின் ஆதர்ச ஹீரோவாக இருப்பவர் சிவாஜி கணேசன் மட்டுமே.

கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக மாறிய சிவாஜி கணேசன்
வயோதிகம் காரணமாக ஹீரோவாக நடிப்பதிலிருந்து ஒதுங்கிய சிவாஜி ஒருகட்டத்தில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஹீரோவாக எப்படி முத்திரை பதித்தாரோ அதேபோல் குணச்சித்திர வேடத்திலும் நடிகர் திலகம் தனி முத்திரையை பதித்தார் என்றே சொல்ல வேண்டும். அப்படி அவர் நடித்த கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்படுபவை.

சம்பளம் நிர்ணயிக்காத சிவாஜி கணேசன்
தான் ஹீரோவாக நடித்தபோது தனது சக போட்டியாளரான எம்ஜிஆர் 8 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக பெற்றபோது சிவாஜி 5லிருந்து 6 லட்சம் ரூபாய் வரை பெற்றார். குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு தயாரிப்பாளரிடம் சம்பளம் குறித்து எதுவும் பேசமாட்டாராம் சிவாஜி கணேசன். தன்னை அணுகும் தயாரிப்பாளரிடம் இந்த கேரக்டருக்கு எவ்வளவு கொடுக்கலாம் என உனக்கு தோன்றுகிறதோ அதை கொடு என்று மட்டும்தான் சொல்வாராம்.

விஜய் படத்தில் 100 ரூபாய்க்கு நடித்த சிவாஜி கணேசன்
அப்படி எஸ்.ஏ.சி இயக்கத்தில் விஜய், சிம்ரன் நடித்த ஒன்ஸ்மோர் படத்தில் நடித்தபோது சந்திரசேகரிடம், 100 ரூபாய் மட்டும் கொடு போதும் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை கொடு என கூறி 100 ரூபாயை மட்டுமே முன்பணமாக பெற்றிருக்கிறார். படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு சிவாஜிக்கு எஸ்.ஏ.சி 10 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.

தேவர்மகனில் சிவாஜியின் சம்பளம்
அதேபோல் கமலுடன் அவர் நடித்த தேவர்மகன் படம் இன்றளவும் பலரது ஃபேவரைட். குறிப்பாக படத்தில் பெரிய தேவராக சிவாஜி கணேசன் நடிப்பில் அதகளம் செய்திருப்பார். இந்தப் படத்துக்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காத சிவாஜி கணேசன் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு என்ன தோன்றுகிறதோ அதை சம்பளமாக கொடுக்கும்படி கமலிடம் கூறியிருக்கிறார். கமலும் படத்தின் வியாபாரம் முடிந்த பிறகு 20 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார். அதுவரை அவர் பெற்ற அதிகபட்ச சம்பளம் அதுதான்.

படையப்பா படத்தில் கோடியை தொட்ட சிவாஜி
இப்படிப்பட்ட சூழலில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான படமான படையப்பாவில் கமிட்டானார் சிவாஜி. அதுவரை தன்னுடைய அதிகபட்ச சம்பளம் 20 லட்சம் ரூபாய் என்பதால் இந்தப் படத்துக்கு கூடுதலாக ஐந்து லட்சமோ அல்லது 10 லட்சமோ கொடுப்பார்கள் என நினைத்திருக்கிறார். சம்பளத்திற்கான காசோலையை சிவாஜியிடம் தயாரிப்பு நிறுவனம் கொடுக்க அதை வாங்கி வீட்டுக்கு சென்ற சிவாஜி தனது மூத்த மகன் ராம்குமாரிடம் கொடுத்திருக்கிறார். காசோலையை பார்த்த ராம்குமார் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் தந்திருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.
இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சிவாஜி. ஒரு பூஜ்ஜியத்தை தவறாக போட்டிருப்பார்கள் என நினைத்து தயாரிப்பாளருக்கு தொலைபேசியில் அழைத்து என்னப்பா பத்து லட்சத்துல ஒரு பூஜ்ஜியத்தை கூடுதலா சேர்த்திருக்கீங்க என்று கேட்டிருக்கிறார்.

ரஜினி சொன்னார் நாங்கள் செய்தோம் - தயாரிப்பு நிறுவனம்
அதற்கு தயாரிப்பாளர் தரப்பு, இல்லை சரியாகத்தான் போட்டிருக்கிறோம். உங்களுக்கு இந்தப் படத்தில் நடித்ததற்கான சம்பளம் ஒரு கோடி ரூபாய். இந்த சம்பளத்தைத்தான் உங்களுக்கு தர வேண்டுமென ரஜினி எங்களிடம் சொன்னார் என கூறியிருக்கிறது. இதனையடுத்து ரஜினிகாந்த்திற்கு நன்றி தெரிவித்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கடிதமும் எழுதியிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் மணிபாரதி வெளியிட்டிருக்கிறார்.
இத்தகவலை தெரிந்துகொண்ட ரசிகர்கள் எவ்வளவு பெரிய இடத்துக்கு சென்றாலும் ஒரு சிறந்த நடிகரை எப்படி மதிக்க வேண்டும் என்பதற்கு ரஜினிதான் உதாரணம். அதனால்தான் அவர் நம்பர் 1 இடத்தில் இன்னமும் இருக்கிறார் என சிலாகித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











