Sivakarthikeyan: 8 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் ரேஸில் சிவகார்த்திகேயன்.. சொன்னபடி ரிலீசாகுமா அயலான்?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் 80 கோடி ரூபாய் வசூலை கடந்து மாஸ் காட்டியது.
இந்தப்படத்தை தொடர்ந்து தற்போது கமல் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.
இதனிடையே நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள சிவகார்த்திகேயனின் அயலான் படம் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது.

8 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் ரேஸில் பங்கேற்கும் சிவகார்த்திகேயனின் அயலான் படம்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகின்றன. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நல்ல விமர்சனங்களை பெற்றதுடன், வசூல்மழையையும் பொழிந்தது. படம் சர்வதேச பாக்ஸ் ஆபிசில் 80 கோடிகளுக்கும் மேல் வசூலித்தது. முன்னதாக அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் வரிசையில் இந்தப் படமும் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கப்பட்டு 75 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. படத்தில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில் காஷ்மீரில் போர்க்காட்சிகள் உள்ளிட்டவை படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் நடக்கவுள்ளது. இதில் படத்தின் நாயகி சாய் பல்லவி இணையவுள்ளார்.
இந்தப் படங்களுக்கு இடையில் சிவகார்த்திகேயனின் அயலான் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டது. இதையொட்டி அவரது ரசிகர்களும் மிகுந்த விருப்பத்துடன் காத்திருந்தனர். சயின்ஸ் பிக்ஷனாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஏலியனை மையமாக வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி மாஸ் காட்டியுள்ள நிலையில் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இந்தப் படம் தீபாவளி ரேசிலிருந்து பின்வாங்கியுள்ளது. மேலும் படம் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளதாக நேற்றைய தினம் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். முன்னதாக வெளியாகியுள்ள மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டிலேயே சிவகார்த்திகேயனின் அயலான் படமும் வெளியாகவுள்ளதாக வெளியான தகவல் அவர்களுக்கு உற்சாகத்தை அளித்திருந்தது.
இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி அயலான் படம் வெளியாகவுள்ள நிலையில், இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. முன்னதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரஜினி முருகன படம்தான் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியானது. இந்நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து அவரது அயலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தவே செய்துள்ளது. ரஜினி முருகன் அதிரிபுதிரி வெற்றியை பெற்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியாகவுள்ள அயலான் படமும் வெற்றிப்படைப்பாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











