Actor Sivakumar: நான் செய்தது தவறுதான்.. சால்வை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சிவக்குமார்!
சென்னை: நடிகர் சிவக்குமார் ஹீரோவாகவும் குணச்சித்திர கேரக்டர்களிலும் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தவர். தற்போது படங்களில் நடிப்பதில் இருந்து விலகி, பொது நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்று வருகிறார். தன்னுடைய மகன்களின் அறக்கட்டளை நிகழ்ச்சிகளிலும் இசை வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளிலும் இவரை அடுத்தடுத்து பார்க்க முடிகிறது. இந்நிலையில் பழ கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற சிவக்குமார், தனக்கு சால்வை போர்த்த வந்த மூத்த ரசிகரிடமிருந்து அதை பிடுங்கி எறிந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் சிவக்குமார் தற்போது மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த நபரை தனக்கு 50 ஆண்டுகாலங்களாக தெரியும் என்றும் அவர் தன்னுடைய தம்பி என்றும் கூறியுள்ளார். தனக்கு சால்வை அணிவிக்க வந்தவருடன் இணைந்து அவர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் தன்னுடைய செயலுக்கு அவர் வருத்தமும் தெரிவித்துள்ளார். முன்னதாக தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற நபரிடமிருந்து செல்போனை பிடுங்கி எறிந்து சர்ச்சைக்குள்ளான சிவக்குமார் தற்போது இந்த சால்வையை பிடுங்கி எறிந்து மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.

நடிகர் சிவக்குமார்: பிரபல அரசியல்வாதி பழ கருப்பையாவின் இப்படித்தான் உருவானேன் என்ற நூல் வெளியீட்டு விழா காரைக்குடியில் நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் வெளியேற முற்பட்டபோது மூத்த ரசிகர் ஒருவர் சிவகுமாருக்கு பொன்னாடை அணிவிக்க முயன்றார். அதை தடுத்த சிவகுமார் அதை பறித்து தூக்கி வீசி எறிந்தது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முன்னதாக செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் அலைபேசியை தட்டிவிட்ட விவகாரத்தில் சிவக்குமார் நடந்து கொண்ட சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது பொன்னாடையை அவர் பிடுங்கி இருந்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொது நிகழ்ச்சிகளில் சிவக்குமார்: நடிகர் சிவகுமார் பல ஆண்டு காலமாக பல படங்களில் ஹீரோவாகவும் கேரக்டர் ரோல்களிலும் நடித்து பெரும் புகழ் பெற்றவர். இவரது மகன்கள் கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் முன்னணி நடிகர்களாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதில் சூர்யா ஒரு படி மேலே போய் தற்போது பாலிவுட்டிலும் தன்னுடைய என்ட்ரியை கொடுக்க உள்ளார். தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தன்னுடைய மகன்களின் அறக்கட்டளைகள் குறித்த நிகழ்வுகளில் அடிக்கடி பங்கேற்கும் சிவகுமார், பல பொது நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அதிகமாக அவர் நடிப்பதில்லை.
சால்வையை பிடுங்கி வீசிய சிவக்குமார்: இந்நிலையில் தற்போது சால்வையை பிடுங்கி வீசிய நிகழ்வு குறித்து நடிகர் சிவகுமார் தற்போது அந்த மூத்த ரசிகருடன் இணைந்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அந்த ரசிகரை தன்னுடைய தம்பி என்று சிவகுமார் அறிமுகம் செய்து வீடியோவில் பேசியுள்ளார். அவருக்கும் தனக்கும் 50 ஆண்டுகாலம் பழக்கம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவில் அந்த ரசிகர் கரீமும் பேசியுள்ளார். கடந்த 1971 ஆம் ஆண்டில் மன்னார்குடியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சிவகுமாரை தான்தான் வரவேற்று அவருக்கு பிடித்தமான தயிர்சாதமும் வெங்காயமும் சாப்பிட கொடுத்ததாகவும் கரீம் தெரிவித்துள்ளார்.
தம்பி என விளக்கம்: இதே போல 1974ம் ஆண்டில் நடைபெற்ற சிவக்குமாரின் திருமணத்திற்கும் கரீம் வந்து, வந்தவர்களை வரவேற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதே போல கரீமின் திருமணத்தையும் தான் முன்னின்று நடத்தியதாக சிவகுமார் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அவருடன் இணைந்து கரீமும் இந்த விஷயங்களை அடுத்தடுத்து பகிர்ந்துள்ளார். அவருடைய திருமணத்திற்கு மட்டுமில்லாமல் அவரது மகன் மற்றும் பேரன் திருமணங்களிலும் தான் கலந்து கொண்டதாகவும் சிவகுமார் தெரிவித்துள்ளார். பொதுவாக பொதுநிகழ்ச்சிகளில் யாராவது தனக்கு சால்வை போர்த்த வந்தால் அதை வாங்கி அவர்களுக்கே மறுபடியும் போர்த்தி விடுவது தனது பழக்கம் என்றும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தவறு என வருத்தம்: சால்வை போர்த்திக் கொள்ளும் பழக்கம் தனக்கு கிடையாது என்று சிவக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் அன்றைய தினம் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு துவங்கி 10 மணிக்கு மேல் நீடித்ததாகவும் இதனால் தான் மிகவும் சோர்வாக உணர்ந்ததாகவும் இறுதியாக தான் பேசிவிட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் கீழே இறங்கி வந்தபோது அங்கே நின்றிருந்த கரீம் தனக்கு சால்வை போட்டுக் கொள்வது பிடிக்காது என்று தெரிந்தும் கையில் சால்வையுடன் நின்றிருந்ததாகவும் சிவகுமார் கூறியுள்ளார். தனக்கு பிடிக்காது என்று தெரிந்திருந்தும் சால்வையை எடுத்து வந்தது கரீமின் தவறு என்றாலும் பொதுவெளியில் அந்த சால்வையை வாங்கி கீழே போட்டது தான் செய்த தவறு என்று சிவகுமார் ஒப்புக்கொண்டுள்ளார் அதற்காக தான் மிகவும் வருத்தப்படுவதாகவும் அவர் இந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











