என் ஞான தந்தையை இழந்துவிட்டேன்.. எழுத்தாளர் கி ரா மறைவுக்கு சிவகுமார் இரங்கல்!
சென்னை: எழுத்தாளர் கி ரா மறைவுக்கு நடிகர் சிவகுமார் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
கி.ரா. என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர்.
1922ம் செப்டம்பர் 19ம் தேதி பிறந்த இவர் கரிசல் இலக்கியத்தின் முன்னோடி என போற்றப்படுகிறார். 1958 ம் ஆண்டு முதல் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்தார்.

பல்கலை பேராசிரியர்
7ம் வகுப்பே படித்து இருந்தாலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய இவர் சாகித்திய அகாதமி விருதை பெற்றவர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் நேற்று இரவு எழுத்தாளர் கி.ரா காலமானார்.

ஞான தந்தையை இழந்துவிட்டேன்
இதுதொடர்பான அவரது இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞான தந்தை 99 வயது கி ரா அவர்களை இழந்துவிட்டேன்.

35 வருட உறவு உண்டு
கி.ரா அவர்களும் கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கு அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.

வாழ்ந்து கொண்டிருப்பார்
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணை பற்றி எழுதிய கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், கரிசல்காட்டு கடுதாசி, வட்டார வழக்கு, சொல்லகராதி போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

மனமார வருந்துகிறேன்
இந்த கொரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.. இவ்வாறு சிவகுமார் தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











