சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்
சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என சிவக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சபரிமலை கோயிலுக்கு பெண்கள் செல்வதற்கான சூழல் ஏற்பட்டது. ஆனால் சிலரின் போராட்டம் காரணமாக நடை திறந்தும் கோயிலுக்கு பெண்கள் செல்ல முடியாதநிலை நீடிக்கிறது.

சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக சபரிமலை அடிவாரத்தில் உள்ள நிலக்கலில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஐயப்ப பக்தர்களும் பெண்களை தடுத்து வருவதால், தொடர்ந்து பிரச்சினை நீடிக்கிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சபரிமலைக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது,
"நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும் கூட்டம் கூட்டமாக கோஷம் போட்டுக் கொண்டே சென்று வழிபட்டனர்.
பெண்களுடைய உதிர போக்கு மோப்ப சக்தி கொண்ட விலங்குகளை ஈர்க்கும் சக்தி கொண்டதால் அவர்களை, ஆண்கள் உடன் அழைத்து செல்வதில்லை. தற்போது காலம் நவீனமயமாகி விட்டது. பழைய காலத்து அச்சங்கள் இப்போது இல்லை.
நீதிமன்றமும் அனுமதி வழங்கி விட்டது. இனியும் பெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு. விரத காலங்களை தவிர்த்து வேறு நாட்களில் பெண்களும் வந்து வழிபாடு செய்யுமாறு ஒரு ஏற்பாடும் உடன்பாடும் உருவாகவேண்டும்.
இப்போது தடுத்தாலும், இன்னும் ஐந்தாண்டுகளில் பெண்கள் நிச்சயம் சபரிமலைக்கு செல்வர். அதை யாராலும் தடுக்க முடியாது. நாம் இன்று இந்த உலகை பார்ப்பதற்கு காரணம் பெண்கள். அனைவரும் அதை மனதில் வைக்க வேண்டும்," என சிவகுமார் கூறினார்.


Click it and Unblock the Notifications











