கண்களைப் பிதுக்கி கார்த்தியை பயமுறுத்திய சூர்யா... ‘மழலை’ நினைவுகளில் சிவக்குமார்
சென்னை: பிரபல நடிகரும், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார், தனது இரண்டு மகன்களுக்கிடையேயுள்ள அன்பு குறித்த தனது மலரும் நினைவுகளை வார இதழ் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நல்ல தந்தை, நல்ல ஓவியர், நல்ல நடிகர் எனப் பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் சிவக்குமார். நடிப்பிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று, தற்போது ஓவியம், பேச்சு என மேலும் தன் திறமைகளை நிரூபித்து வருகிறார் இவர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக ஆனந்தவிகடனில் 'விகடன் மேடை' என்ற பகுதியில் வாசகர் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதில் வாசகர் ஒருவர், 'சினிமாவில் நடிப்பது போலவே கார்த்தி, நிஜத்திலும் சேட்டைக்காரர் தானா?' எனக் கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு சிவக்குமாரின் பதில் பின்வருமாறு :-

சேட்டை தான்...
சூர்யாகிட்ட மூத்த பையனுக்கான பொருப்பும், பக்குவமும் இருக்கும். ஆனா, கார்த்தி எப்பவுமே சேட்டை, அரட்டை தான்.

அதே தப்பு...
ரெண்டு குழந்தைங்க இருந்தா, ஒரு குழந்தையை உயர்த்தியும், இன்னொரு குழந்தையை மட்டம் தட்டுற தப்பை எல்லா வீடுகள்ல பண்ற மாதிரி தான் நாங்களும் பண்ணினோம்.

டார்ச்சர்...
அப்பிராணி, சாதுனு சூர்யாவைத் தட்டியும், சுட்டி, சமத்துனு கார்த்தியைத் தூக்கி வெச்சும் கொஞ்சுவோம். அப்போலாம் சூர்யா மனசுக்குள்ள கொதிப்பான். அந்தக் கோபத்தோட ராத்திரியில தம்பியை டார்ச்சர் பண்ணுவான்.

பேய் பயம்...
கார்த்திக்கு அப்ப பேய் பயம் நிறைய உண்டு. அதனால கண் முழியைப் பிதுக்கிட்டு, சாக்பீசால கோரப்பல் வரைஞ்சு கார்த்தி மேல ஏறி உட்கார்ந்து டார்ச் லைட்டை அவன் மூஞ்சி மேல அடிச்சு பேய் மாதிரி பயமுறுத்துவான்.

கார்த்திக்கு அடி...
கார்த்தி அலறுவான். சத்தம் கேட்டுப் போற என் வீட்டம்மா, சூர்யாவை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. ‘அவன் பயமுறுத்தினா, நீ பயப்படுவியாடா?'னு கார்த்தியைத் தான் சாத்துவாங்க.

அம்மானு கூப்பிட்டவன்...
பெரியவனை ஏம்மா அடிக்க மாட்டேங்குறனு கேட்டா, முதமுதல்ல என்னை அம்மானு கூப்பிட்டவனை எப்டிடா அடிக்க முடியும்னு சொல்லுவாங்க.

அமெரிக்க பயணம்...
ஆனா, கார்த்தி எம்.எஸ் (இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்) படிக்க அமெரிக்கா போனப்ப, சூர்யா தவிச்சுப் போயிட்டான். அப்பத்தான் இ-மெயில் புதுசா வந்திருந்த சமயம்.

ரெண்டு பக்க மெயில்...
டேய் கார்த்தி, எப்படிடா எங்களை எல்லாம் விட்டுட்டு அங்கே போன, நானா இருந்தா அதே பிளைஃட்ல திரும்பி வந்திருப்பேன். உன்னை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன். என்னை மன்னிசிருடா' என உருகி உருகி இவன் ரெண்டு பக்கத்துக்கு மெயில் அனுப்பினான்.

இது தான் பதில்....
அண்ணன்னா அப்டித்தான் இருப்பான்னு அவன் ரெண்டே வரில பதிலை முடிச்சிட்டான்.

தனி சினிமா....
இவனுங்க ரெண்டு பேருக்குள்ள நடந்த அதகளங்களை தனி சினிமாவாவே எடுக்கலாம்' என இவ்வாறு சிவக்குமார் தனது மலரும் நினைவுகளை வாசகர்கலுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











