எனக்கு முதன்முதலா என்ன பாட்டு பாடுனீங்க, ஞாபகமிருக்கா? வெளியே வாங்க பாலு.. சிவகுமார் உருக்கம்!
சென்னை: கொரோனா ஒரு சவால், விரைவில் குணமடைந்து வெளியே வாங்க பாலு என்று நடிகர் சிவகுமார் கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து திரை பிரபலங்களும் அவர் ரசிகர்களும் விரைவில் குணமடைய பிரார்த்தித்து வருகின்றனர்.

வென்டிலேட்டர்
சமூக வலைதளங்களிலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. நேற்று வெளியிட்ட அறிக்கையில் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளையராஜா, ரஜினி
இந்நிலையில் அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டி இளையராஜா, ரஜினிகாந்த், வைரமுத்து உள்பட பலர் வீடியோ வெளியிட்டிருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் உள்பட திரையுலகினரும் இசை அமைப்பாளர்களும் அவர் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என்று வேண்டுவதாக சமூக வலைதளத்தில் கூறியுள்ளனர். இந்நிலையில் நடிகர் சிவகுமாரும் அவர் விரைவில் குணமடைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் சிவகுமார்
அதில் நடிகர் சிவகுமார் கூறியிருப்பதாவது: 'பாலு, என்னை விட நீங்க 4 வயசு சின்னவர். அதனால தம்பின்னே கூப்பிடலாம். உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்றப் பாடகர். நீங்க நிறைகுடம். நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள்ல எனக்காக பாடியிருக்கீங்க. முதன் முதலா நீங்க எனக்கு எந்த படத்துல பாடுனீங்க, ஞாபகம் இருக்கா?

முள்ளில்லா ரோஜா
'மூன்று தெய்வங்கள்' படத்துல, முள்ளில்லா ரோஜா முத்தாரம் பொன்னூஞ்சல் கண்டேன் பாடல், ஞாபகமிருக்கா? அடுத்து ஏபிஎன் (ஏ.பி.நாகராஜன்) 'கண்காட்சி' படத்துல பாடச் சொன்னாரே அந்தப் பாட்டு, பிச்சிட்டீங்க.. அப்புறம், சிட்டுக்குருவி பாட்டு உலகம் முழுவதும் போயிட்டிருக்கு, என் கண்மணி என் காதலி பாட்டு. எல்லாத்துக்கும் மேல என்னோட நூறாவது படத்துக்கு பாடுனீங்களே, மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான்..

உச்சி வகுந்தெடுத்து
அதுக்குப் பிறகு, உச்சி வகுந்தெடுத்து பச்சமலை பக்கத்துல.. இந்தப் பாட்டுக்கு நீங்க கொடுத்த எமோஷனுக்கு 45 நாள், காடுகள்லயும் மலைகள்லயும் வெயில்லயும் பனியிலயும் காய்ஞ்சு வறண்டு, உதட்டுல ரத்தம் வர வச்சு நான் நடிச்சேன். வாழ்க்கையில எத்தனையோ சவால்களை சந்திச்சவர் நீங்க.. கொரோனாவும் ஒரு சவால், சீக்கிரம் குணமடைஞ்சு ஆஸ்பத்திரியில இருந்து வெளியில வாங்க பாலு''. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











