இளையராஜா இசை.. அப்பா அம்மா செய்த புண்ணியம் - நெகிழ்ந்துபோன சூரி
சென்னை: இளையராஜாவின் இசையில் நான் நடித்திருப்பது எனது அப்பா, அம்மா செய்த புண்ணியம் என நடிகர் சூரி நெகிழ்ச்சியுடன் ட்வீட் செய்திருக்கிறார்.
வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் காமெடி நடிகராக அனைவரிடமும் பதிவு ஆனவர் சூரி. அதன் பிறகு அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல ஹீரோக்களுடன் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அதேசமயம் சூரியின் நகைச்சுவை ஒரே மாதிரி இருப்பதாக விமர்சனமும் எழுந்தது உண்டு.

விடுதலையில் ஹீரோவான சூரி
சந்தானம், யோகிபாபு என காமெடி நடிகர்கள் ஹீரோவாக வலம் வர ஆரம்பிக்க சூரி எப்போது ஹீரோவார் என்ற பேச்சுகள் எழுந்தன. இப்படிப்பட்ட சூழலில் ஜெயமோகனின் கதையை தழுவி வெற்றிமாறன் விடுதலை படத்தை ஆரம்பித்தார். இதில் சூரி கதாநாயகனாக அறிமுகமானார். அவருடன் விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார்.

விடுதலையின் இரண்டு பாகங்கள்
பல வருடங்கள் விடுதலை படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்தப் படத்தில் சூரி காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இந்தப் படமானது இரண்டு பாகங்களாக வெளிவரவிருக்கிறது. நக்சலைட்டுக்கும், ஒரு காவல் துறை அதிகாரிக்கும் இடையே நடக்கும் சம்பவம்தான் கதை என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ராசாவே உன்னால் ஆகாசம் விரியும்
விடுதலை படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருந்த நிலையில் நேற்று படத்தின் ஒரு பாடல் வெளியானது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சுகா எழுத, தனுஷ் பாடியிருக்கிறார். பாடலின் லிரிக்கல் வீடியோ முழுக்க முழுக்க தமிழில் வெளியானதும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே இளையராஜா இசையில் சூரி நடித்திருப்பது அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய பாக்கியம் என்று பலர் கூறிவருகின்றனர்.

இளையராஜா இசை குறித்து நெகிழ்ந்துபோன சூரி
இந்நிலையில் நடிகர் சூரி இளையராஜாவின் இசையில் நடித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "என் அப்பா அம்மா செய்த புண்ணியம் , என் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்,இசைஞானி இளையராஜா ஐயாவின் முத்தான பாடலில் எனக்கு நடிக்க கிடைத்த இந்த வாய்ப்பு. இதை ஏற்படுத்தி தந்த வெற்றிமாறன் அண்ணனுக்கும், பாடலாசிரியர் சுகா அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என குறிப்பிட்டுள்ளார்.

தனுஷின் பங்களிப்புக்கு நன்றி சொன்ன சூரி
பாடல் பாடிய தனுஷ் குறித்தும் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், "சொக்க வைக்கும் குரலில் இந்த அற்புதமான பாடலை பாடி தந்த தனுஷ் சார் க்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது.இந்த படைப்பில் உங்களின் இந்த பங்களிப்பு எங்களுக்கு எல்லாம் பெருமை சார்" என தெரிவித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











