Maaman: மாமன் படம் வெற்றி பெற மண் சோறு சாப்பிட்ட சூரியின் ரசிகர்கள்.. முருகன் கோவிலில் நடைபெற்ற வேண்டுதல்
மதுரை: சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் மாமன். இந்த படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். படம் அக்கா, தம்பி உறவு குறித்து ஆழமாகவும் உறவுகளின் முக்கியத்தும் குறித்தும் கதை ஆக்கப்பட்டுள்ளது. படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார். படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், சூரியின் ரசிகர்கள் திருப்பரங்குன்றம் கோவிலில் மண் சோறு சாப்பிட்டு படம் வெற்றி பெற வேண்டியுள்ளனர்.
விடுதலை படத்திற்கு பின்னர் சூரி கதாநாயகனாகவும், கதையின் நாயகனாகவும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. மேலும் வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் மாறுகிறது. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான விடுதலை பாகம் இரண்டு படம் பெரும் பாராட்டுக்களை குவித்தது. அதேபோல், கடந்த ஆண்டில் மட்டும் இவரது நடிப்பில் மூன்று படங்கள் வெளியானது. கருடன், கொட்டுக் காளி மற்றும் விடுதலை பாகம் 2 ஆகிய படங்கள் வெளியானது. மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது.
கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது. அதேபோல், விடுதலை பாகம் இரண்டு மற்றும் கருடன் படங்கள் வணிக ரீதியான வெற்றியைக் கொடுத்தது. இவரது நடிப்பில் உருவாகி இன்று அதாவது மே 16ஆம் தேதி வெளியாகியுள்ள படம் மாமன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாற வேண்டும் என சூரியின் ரசிகர்கள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் செய்துள்ளனர். மேலும் அப்போது சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனையும் செய்துள்ளார்கள். இந்த வேண்டுதல் நேற்று அதாவது மே 15ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

மண் சோறு: அதன் பின்னர் சூரியின் ரசிகர்கள் பேசுகையில், " மாமன் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டரில் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுதலை அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் முருகனிடம் வேண்டியுள்ளோம். படம் வெற்றி பெற வேண்டும் என மண் சோறு சாப்பிட்டு உள்ளோம். மண்ணின் மைந்தன் அண்ணன் சூரியின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்துள்ளோம். படம் தொடர்பான காட்சிகளைப் பார்க்கும்போது படம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சூரி மீது அன்பு: அப்பன் முருகன் மற்றும் ஆத்தா மதுரை மீனாட்சி ஆசியுடன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாமன் வரவேண்டும். அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இந்த படத்திற்கு மட்டும் இல்லை, இனி அண்ணன் சூரி நடிப்பில் வெளிவரும் அனைத்து படங்களுக்கும் நாங்கள் இது போல செய்வோம். அவர் மீது இவ்வளவு அன்பு ஏற்பட காரணம், அவர் மற்றும் அவரது ரசிகர்கள் செய்யும் நல்ல காரியங்கள் தான். கொரோனா காலத்தில் தொடங்கிய தொண்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. வரும் காலங்களிலும் மக்களுக்கு நல்லது செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











