Actor Vijayakanth: ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளுக்காக யோசித்த விஜயகாந்த்.. நடிகர் சூரி நெகிழ்ச்சி!
சென்னை: நடிகர் விஜயகாந்த் கடைக்கோடி மக்களுக்காகவும் யோசித்தவர். வாழும்போதே வள்ளலாகவும் அனைத்து தரப்பு மனிதர்களின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டவர். அவரது காலத்தில் அன்னதானம் என்பதை முதன்மையாக மனதில் கொண்டு செயல்பட்டவர். வாழும்போதே கருப்பு எம்ஜிஆர் என்ற போற்றுதலுக்கு உள்ளானவர். அவரது சிறப்பான செயல்பாடுகளே தற்போது அவரை இறந்தபின்பும் கொண்டாட செய்துள்ளது. அவருக்கு இறுதி மரியாதை செய்ய குவிந்த பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என அனைவரும் அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு சாட்சிகளாக உள்ளனர்.
உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கிக் கொண்ட விஜயகாந்த், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாகவே இவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை விஜயகாந்த் மறைந்தார். இவரது இந்த உயிரிழப்பு ரசிகர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் 30 ஆண்டுகளை கடந்து சினிமாவில் தொடர்ந்து லீட் கேரக்டர்களில் நடித்தவர். ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக இருந்தவர். குறிப்பாக அதிரடி ஆக்ஷன் படங்களில் தன்னை நிலை நிறுத்தியவர். இவர் பறந்து பறந்து அடிப்பதை பார்ப்பதற்காகவே திரையரங்குகளுக்கு படையெடுத்த ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ரீல் வாழ்க்கையில் மட்டுமில்லாமல் ரியல் வாழ்க்கையிலும் தான் ஹீரோ தான் என்று நிரூபித்தவர் விஜயகாந்த். இயக்குநர், நடிகர் என்ற கனவுகளுடன் தன்னை நாடி வருபவர்களுக்கு வயிராற சோறு போட்டவர் என்ற பெருமையை தொடர்ந்து பெற்றவர் விஜயகாந்த்.
சமமான உணவுமுறையை கொண்டுவந்தவர்: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை மனதில் நிறுத்தி செயல்பட்டவர் விஜயகாந்த். கடுமையான போராட்டங்களுக்கிடையில் தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றதை என்றைக்கும் மறக்காத குணமுள்ளவர். தான் அறிமுகமானபோது தன்னை மதிக்காமல் பாதி சாப்பாட்டிலிருந்து தன்னை எழுப்பி அவமானப்படுத்தப்பட்டதை எப்போதும் மறக்காதவர். அதனால்தான் தான் நடிக்கும் படங்களில் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்தார். தான் கூல்டிரிங்ஸ், இளநீர் என எதை குடித்தாலும் நான் வெஜ் சாப்பிட்டாலும் அது யூனிட்டில் அனைவருக்கும் கிடைக்கும்வகையில் அவர் ஏற்பாடு செய்திருந்தார்.
தரத்துடன் வழங்கப்பட்ட காபி: லீட் கேரக்டர்களுக்கு காபி, டீ போன்றவை திக்காகவும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பாலில் தண்ணீர் கலந்து கொடுப்பதையும் தயாரிப்பு தரப்பு வழக்கமாக கொண்டிருந்த காலகட்டத்தில் விஜயகாந்த் தன்னுடைய வீட்டிலிருந்து நான்கு அண்டாக்களில் காபி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் என கொண்டுவந்து அனைவரும் தேவையானபோது குடித்துக் கொள்ள ஏற்பாடு செய்ததாக அவருடன் நடித்த நடிகர் வின்சன்ட் ராய் பேட்டியொன்றில் கூறியுள்ளார். உணவில்கூட பாகுபாடு பார்க்காமல் விஜயகாந்த் நடந்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

நடிகர் சூரி நெகிழ்ச்சி: இதனிடையே இந்தக் கருத்தை நடிகர் சூரியும் தனது பேட்டியில் கூறியுள்ளார். பெரியண்ணா படத்தில் தான் விஜயகாந்துடன் இணைந்து நடித்தபோது நடந்த சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்துள்ளார். பாறைகள் அதிகமாக இருக்கும் ஏரியாவில் சூட்டிங் நடந்ததாகவும் மதியம் உணவு இடைவேளையின்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் அனைவரும் வெயிலில் நின்றபடி சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் அதை பார்த்த விஜயகாந்த், உடனடியாக மேனேஜரை அழைத்து, அந்த இடத்தில் பந்தல் போடும்படி உத்தரவிட்டதாகவும் சூரி தெரிவித்துள்ளார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்காகவும் யோசித்த விஜயகாந்தின் பண்பை அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
விஜயகாந்த் உபசரிப்பு: இதேபோல தவசி படத்தில் விஜயகாந்தை பார்ப்பதற்காக விழுப்புரம், திருச்சி போன்ற இடங்களில் இருந்து வந்தவர்கள் கத்தி கூச்சல் போட்டதாகவும் அவர்களை ஒரே அசைவில் அடக்கிய விஜயகாந்த், சூட்டிங்கை முடித்துவிட்டு அவர்களை அழைத்து கைக்குலுக்கிவிட்டு, மேனேஜரை அழைத்து அவர்கள் அனைவருக்கும் சாப்பாடு தயார் செய்து சாப்பிட வைக்குமாறு கூறியதையும் சூரி நினைவு கூர்ந்துள்ளார். நல்ல மனிதர் என்றும் சூரி பாராட்டு தெரிவித்துள்ளார். விஜயகாந்த் குறித்து சொல்வதற்கு ஆயிரம் நல்ல விஷயங்கள் இருந்தாலும் அவரது உணவு உபசரிப்பைதான் அனைத்து பிரபலங்களும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











