Kottukkaali Box Office: நடிப்பில் மிரட்டிவிட்ட சூரி, அன்னா பென்..கொட்டுக்காளி வசூல் விபரம்!
சென்னை: கூழாங்கல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் நேற்று முன் தினம் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், கொட்டுக்காளி. இந்தப் படத்தில் சூரி மற்றும் அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தினை நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படம் குறித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக அமைந்தது, படத்திற்கு இசை அமைப்பாளரே இல்லை என்பதுதான். இந்நிலையில் படத்தின் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம்.
கொட்டுக்காளி படம் உலகத்தில் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருது பெற்றது. சூரி கதாநாயகனாக நடித்துள்ள மூன்றாவது படம். முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்ற சூரி மூன்றாவது படத்திலும் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். படத்தினைப் பார்த்த பலரும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டினர்.

இதுமட்டும் இல்லாமல், படத்தினை பாராட்டிய உலகநாயகன் கமல் ஹாசன், “ நிஜமாகவே சினிமா ஒரு தனி மொழி. அது உங்களுக்கு வருது. அதனால நீங்க எப்போதும் விட்டுவிடக்கூடாது. அத செய்யனும்னு தோணுதுனா உங்களுக்கு தனி பாராட்டு. ரொம்ப நல்லா இருக்கு. சில முடிவுகள் எப்படி எடுத்தீங்கனு தெரியல. மியூசிக் போடாம இருந்தது எல்லாம் சரியான முடிவு” எனக் கூறினார்.
பேய்க்கதை: மேலும் அவர், ”இது பேய்க் கதைதான். காதல் பேய்க் கதை. நாயகியின் கண்ணில் பூமியின் பொறுமை தெரிகிறது. பின்னணி இசை என்று எதுவும் இல்லை. டைட்டில் கார்டில் வரும் 'இயற்கைக்கு நன்றி' என்ற வாசகத்தின் பொருள், ஒளிப்பதிவிலும் ஒலிப்பதிவிலும் தெரிகிறது. இயற்கைதான் படத்தின் இசை குலதெய்வக் கோயிலை நெருங்குகையில் சிறுவன் கார்த்திக் வாயால் கொடுக்கும் சினிமாப் பாணி பின்னணி இசைதான் ஒரு சின்னக் கிண்டலுடன் இந்தப் படத்தில் அவை இல்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆணாதிக்கத்தின் குறியீடுகளாக சேவல், சீறும் காளை, பாண்டியன், பூசாரி என்று பலர் இருந்தாலும் அவற்றை நாயகி எதிர்கொள்ளும் விதம், காலம் மாறிவிட்டதை மற்ற பாத்திரங்கள் புரிந்துகொள்ளாவிடினும் பார்வையாளர்களாகிய நமக்கு படம் பிடித்துக் காட்டப்படுகிறது” என சிலாகித்து பாராட்டினர்.

பாலா: அதேபோல் இயக்குநர்கள் பாலா, வெற்றி மாறன், ராம், மிஷ்கின், பா.ரஞ்சித் என பலரும் படத்தை பாராட்டினர். குறிப்பாக இயக்குநர் பாலா படக்குழுவினரைப் பாராட்டி மடல் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “ நம்முடைய தமிழ் திரைப்படத்துறையில் இருந்து, உலகம் வியக்கும் கலைஞர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதற்கான முக்கியமான சான்றுகளில் ஒன்று, இந்தக் கொட்டுக்காளி. ஆழமான இக்கதையை எளிமையாகவும் வலிமையாகவும் எடுக்க முடியும் என்று களமாடி, ஓர் அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் வினோத்ராஜ்.

நாயகி அன்னா பென்: குறிப்பாக, சூரி தனது கதாப்பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டமும் அமைதியும் ஒரு சேர இணைந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒரு நடிகராகத் திரையுலகில் ஆழ்ச்சுவடு பதித்து தாண்டவமாடியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. படத்தின் தலைப்பிற்கே நியாயம் சேர்க்கும் வகையில் மிக அழுத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார் நாயகி அன்னா பென். படத்தில் நடித்திருக்கும் அனைவருமே. தாங்களும் ஒரு முக்கியக் கதாப்பாத்திரம்தான் என்று சவால் விட்டிருக்கிறார்கள்” என குறிப்பிட்டிருந்தார்.
வசூல் விபரம்: படம் முதல் ரிலீஸ் ஆகி இன்றுடன் மூன்று நாட்கள் ஆகின்றது. இதில் முதல் இரண்டு நாள் வசூல் விபரம் குறித்து பார்க்கலாம். முதல் நாளில் படம் ரூபாய் 42 லட்சமும் இரண்டாவது நாளில் ரூபாய் 33 லட்சமும் வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் படத்தின் உண்மையான வசூல் குறித்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications











