விடுதலை 2க்கு முன்பே கருடன் ரிலீசாகிவிடும்.. சூரி கொடுத்த அப்டேட்!
சென்னை: விடுதலை 2 திரைப்படத்திற்கு முன்பே கருடன் திரைப்படம் வெளியாகிவிடும், இந்த படமும் விடுதலை படம் போல உங்களுக்கு பிடிக்கும் என்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சூரி பேசி உள்ளார். இப்படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக பல படங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தவர் நடிகர் சூரி. இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் தேசிங்கு ராஜா, ஜீவா, வேதாளம், ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் வசூலை அள்ளியது. காமெடியனாக அசத்தி வந்த சூரி தற்போது கதாநாயகனாக அவதாரம் எடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

நடிகர் சூரி: கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படம் மெகா ஹிட் ஆனது. இந்த படத்திற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக்கொண்டு, அந்த படத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்திருந்தார். விடுதலை படத்தில் பல காட்சிகளில் அவர் டூப்பே இல்லாமல் நடித்தது பாராட்டை பெற்றது. விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகம் தற்போது உருவாகி வருகிறது.
விடுதலை 2: விடுதலை படம் கொடுத்த உத்வேகத்தால், நடிகர் சூரி, வெற்றிமாறன் கதை எழுதியுள்ள, துரை செந்தில்குமார் இயக்கி வரும் கருடன் படத்தில் கமிட்டானார். இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கருடன் விரைவில் ரிலீஸ்: இந்நிலையில், மதுரையில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, விடுதலை 2 படத்தில் என்னுடைய படப்பிடிப்புக்கான காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டது. ஆனால், இன்னும் சில காட்சிகள் மட்டுமே எடுக்க வேண்டி இருப்பதால், படம் விரைவில் ரிலீஸாகி விடும். அடுத்ததாக நான் நடித்து வரும், கருடன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விடுதலை 2 படத்திற்கு முன்பே கருடன் திரைப்படம் வெளியாகி விடும். விடுதலை 2 திரைப்படம் போலவே கருடன் திரைப்படம் நல்ல படமாக இருக்கும், இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.
வளர்ச்சிக்கான ஓட்டு: மேலும், உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் பிரச்சாரத்திற்கு அழைத்தால் போவீங்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சூரி, அவர் என்னை அழைக்கவில்லை, அதுமட்டுமில்லாமல் அவருக்கு நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்று தெரியும். அவருக்கு எப்போதும் என் வாழ்த்துக்கள் உண்டு என்றார். மேலும், கன்னி சாமி போல கன்னி ஓட்டுக்கு தயாராக இருக்கிறார்கள். உங்களின் ஒவ்வொரு ஓட்டும் சாதாரண ஓட்டு இல்ல, நமது நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கைக்கான ஓட்டு அது. அதை நன்றாக சிந்தித்து வாக்கு அளிக்க வேண்டும் என்று சூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











