நடிகர் எஸ். எஸ். ஆரின் 3வது மனைவி தாமரைச்செல்வி காலமானார்.. திரைத்துறையில் அடுத்தடுத்து 3 சோகங்கள்
சென்னை: மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் 3வது மனைவி தாமரைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 60. திரைத்துறையில் அடுத்தடுத்து 3 மரணங்கள் ஏற்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனுக்கு பங்கஜம், நடிகை விஜயகுமாரி, தாமரைச்செல்வி என்ற மூன்று மனைவிகளும், இளங்கோவன், ராஜேந்திர குமார், கலைவாணன், செல்வராஜ், பாக்யலட்சுமி, ரவிக்குமார், கண்ணன் உள்ளிட்ட 7 பிள்ளைகள் உள்ளனர்.
நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மனைவியும் நடிகர் எஸ்.எஸ். ஆர் கண்ணனின் தாயாருமான தாமரைச்செல்வியின் மரணம் திரையுலகினரை மீண்டும் மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் இருந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் 2014ம் ஆண்டு மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே வீட்டில் வசித்து வந்த அவரது 3வது மனைவி தாமரைச்செல்வி உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

ஷிஹான் ஹூசைனி, மனோஜ் பாரதிராஜாவை தொடர்ந்து எஸ்.எஸ்.ஆரின் மனைவியும் மறைந்தது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பராசக்தி முதல் பல படங்கள்: 1952ம் ஆண்டு வெளியான பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் உடன் இணைந்து நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் மறைந்த பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன். பணம், மனோகரா, சொர்க்கவாசல், ரத்தக்கண்ணீர், ராஜா ராணி, திருடர்கள் ஜாக்கிரதை, தேடி வந்த செல்வம், புதுமைப்பெண் என பல படங்களில் நடித்துள்ளார். அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்த எஸ். எஸ். ராஜேந்திரன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதி காலமானார். அவருக்கு மொத்தம் 3 மனைவிகள் மற்றும் 7 பிள்ளைகள் உள்ளனர்.
3 மனைவிகள்: பெயருக்கு ஏற்றவாரே ராஜா போலத்தான் வாழ்ந்துள்ளார் ராஜேந்திரன். அவர் ஆரம்பத்தில் கவிஞர் பாரதிதாசன் தலைமையில் பங்கஜம் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர், தன்னுடன் பல படங்களில் நடித்து வந்த சி.ஆர். விஜயகுமாரியை திருமணம் செய்துக் கொண்டார். அதன் பின்னர், இறுதியாக தாமரைச்செல்வியை திருமணம் செய்துக் கொண்டு சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் பல ஆண்டுகள் தாமரைச் செல்வியுடன் வாழ்ந்து வந்த நிலையில், 2014ம் ஆண்டு காலமானார். சுமார் 11 ஆண்டுகள் கழித்து அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.
பிரபலங்கள் இரங்கல்: எஸ். எஸ். ராஜேந்திரனின் மனைவி உயிரிழந்த தகவல் அறிந்த சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து சினிமாத் துறையில் 2 நாட்களில் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேல் தாங்க முடியாது இறைவா என சில பிரபலங்கள் ஓபனாகவே புலம்பி வேண்டி வருகின்றனர். நாளை மாலை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











