அதிர்ச்சி.. இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா விஷம் குடித்து தற்கொலை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ஹைதராபாத்: இளம் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா (வயது 33) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது டோலிவுட் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. சினிமா துறையில் அடுத்தடுத்து நடிகர்கள் உயிரிழப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம் வயதில் திடீரென இப்படி பிரபலங்கள் பிரஷர் தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக் கொள்வது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வரும் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு வெளியான குண்டனப்பு பொம்மா மற்றும் அதனை தொடர்ந்து வெளியான செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா.
மன அழுத்தம் காரணமாக திடீரென விஷம் கொடுத்து உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விஷம் குடித்து
கடந்த ஜனவரி 18ம் தேதி தெலுங்கு நடிகர் சுதீர் வர்மா மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் விஷம் குடித்தார். சுதீர் வர்மா உயிருக்கு போராடிய நிலையில், அருகில் இருந்தவர்கள் அவரை அழைத்துக் கொண்டுபோய் கொண்டாபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சுதீர் வர்மா மரணம்
ஆனால், அங்கிருந்து அவரை விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கடந்த 20ம் தேதி கொண்டு சென்று அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஜனவரி 23ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் சுதீர் வர்மா. சரியாக பட வாய்ப்புகள் கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. போலீஸார் இந்த தற்கொலை மரணம் தொடர்பான விசாரணையை நடத்தி வருகின்றனர்.

33 வயது தான்
தெலுங்கு திரையுலகில் குண்டனப்பு பொம்மா மற்றும் செகண்ட் ஹேண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த சுதீர் வர்மாவுக்கு அதன் பின் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியாக அலைர் எனும் வெப்சீரிஸில் நடித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஜனவரி 18ம் தேதி தற்கொலை செய்து கொள்ள நினைத்த அவர் விஷம் குடித்து விட்டார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எப்படியாவது அவரை காப்பாற்றி விடலாம் என நினைத்து போராடிய நிலையில், விஷம் உடல் முழுவதும் பரவியதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சக நடிகர் வேதனை
சுதீர் வர்மாவுடன் குண்டனப்பு பொம்மா படத்தில் இணைந்து நடித்த சக நடிகர் சுதாகர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் சினிமா விழாவில் சுதீர் பேசிய போட்டோவையும் ஷேர் செய்து இவ்வளவு சீக்கிரம் இப்படியொரு முடிவை நீ எடுப்பாய் என நினைக்கவில்லை. மனம் வேதனையடைகிறது என இரங்கல் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











