பிரபல நடிகருக்கு புற்றுநோய்.. நான்காம் கட்டமாம்.. கடுமையான கஷ்டம் வேறு.. சூப்பர் ஆக்டர் ஆச்சே
சென்னை: தமிழ் சினிமாவில் குணசித்திர மற்றும் காமெடி ரோல்கள் ஏற்று நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சுப்பிரமணி. திரையுலகில் அவரை பலரும் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். அவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு என ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தனக்கு கொடுக்கப்படும் கேரக்டரில் மிக திறமையாக நடித்து நல்ல நடிகர் என்று பெயர் எடுத்த அவர் கடைசியாக பரமன் என்கிற படத்தி நடித்திருந்தார்.
சினிமாவை விரும்பாதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அந்தத் துறையில் நுழைந்து நடிகராகவோ, இயக்குநராகவோ, கலை இயக்குநராகவோ, கேமரா மேனாகவோ ஏன் ஒரு ஆஃபிஸ் பாயாகவோ மாறிவிட வேண்டும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஏனெனில் சினிமாவில் மட்டும்தான் ஓவர் நைட்டில் ஒபாமா ஆகலாம் என்கிற நிலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பலர் அந்தத் துறையில் நுழைவதற்கும், நுழைந்த பிறகு அதில் நிலைப்பதற்கும் முட்டி மோதுவதுண்டு.
சூப்பர் குட் சுப்பிரமணி: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுப்பிரமணி. இவரை திரைத்துறையில் சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைப்பார்கள். ஏனெனில் கோலிவுட்டில் பல ஹிட் படங்களை கொடுத்த தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் கம்பெனியில் அவர் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணியாற்றிவந்த அவருக்கு உள்ளுக்குள் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. அதனை தாமதமாகத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
உதவி இயக்குநர் சுப்பிரமணி: இயக்கும் ஆசை இருந்தாலும் அதற்கேற்ற பயிற்சி எடுக்க வேண்டுமென்பதற்காக சரவண சுப்பையா இயக்கத்தில் உருவான சிட்டிசன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அதேபோல் பிரபல இயக்குநரான பவித்ரனிடமும் சுப்பிரமணி உதவி இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மேலும் தமிழ் திரைத்துறையில் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்த அவர்; ஒரு கதையையும் தயார் செய்து இயக்குவதற்கும் ரெடியானார்.

அதிர்ஷ்டம் இல்லை: அந்தக் கதையை விஜயகாந்த், சத்யராஜ், விஜய் பெரும்பாலான கதாநாயகர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் யாரும் நடிப்பதற்கு முன்வரவில்லை.அதனைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர்களிடமும் அந்தக் கதை சென்றது. இருப்பினும் அங்கிருந்தும் நடிக்க யாரும் தயாராகவில்லை. ஆனாலும் எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்பதில் மிக தீவிரமாக இருந்த சுப்பிரமணிக்கு கடைசிவரை இயக்குநராகும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதேசமயம் சினிமாவுக்கு உண்மையாக இருந்தால் சினிமா எப்போதும் கைவிடாது என்பதற்கேற்ப அவருக்கு இன்னொரு கதவை சினிமா திறந்து வைத்தது.
நடிகரான சுப்பிரமணி: அதாவது சினிமாவில் அவர் நடிகராக வலம் வர ஆரம்பித்தார். இயக்குநராக வெல்ல முடியவில்லை நடிகராக பெயர் எடுக்க வேண்டும் என்று மிக தீவிரமாக உழைத்த அவர் காலா, பரியேறும் பெருமாள், பிசாசு, ஜெய் பீம்,வானம் கொட்டட்டும், ஹீரோ, அருவம், மகாமுனி, கூர்கா, இரும்பு திரை, ரஜினி முருகன், அழகர்சாமியின் குதிரை என ஏகப்பட்ட படங்களில் நடித்தார். தான் ஏற்ற ரோலை மிக சிறப்பாக செய்துகொண்டிருந்தார். அதிலும் பரியேறும் பெருமாள், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் மிகச்சிறந்த நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
சுப்பிரமணிக்கு புற்றுநோய்: அவரது நடிப்பில் கடைசியாக பரமன் திரைப்படம் வெளியானது. அதில் அவர்தான் லீட் ரோலை ஏற்றிருந்தார். இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் என்பது தெரியவந்திருக்கிறது. தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் நான்காம் கட்ட புற்றுநோயோடு கடுமையான நிதி நெருக்கடியுடன் போராடிவருகிறார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அதுமட்டுமின்றி அவருக்கு பலரும் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதனை கேள்விப்பட்ட ரசிகர்களோ மிக எதார்த்தமாக நடிக்கக்கூடியவருக்கு இப்படி ஒரு நிலைமையா அவருக்கு திரைத்துறையினர் உதவ வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











