நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. நடிகர் சூர்யா உருக்கம்!
சென்னை: இயக்குநர் கேவி ஆனந்த் மறைவு குறித்து நடிகர் சூர்யா உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கேவி ஆனந்த் நேற்று காலை மரணமடைந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டு இயக்குநர் கேவி ஆனந்த் காலமானார். கொரோனா தொற்று காரணமாக கேவி ஆனந்த் உயிரிழந்ததால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவில்லை.

கதறிய குடும்பம்
வீட்டின் முன்பு ஆம்புலன்ஸில் இருந்த அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறியழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை கலங்க செய்தது. சில நிமிடங்கள் மட்டுமே அங்கு நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் நேரடியாக பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு கேவி ஆனந்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

கடைசி வரை நின்ற சூர்யா
கேவி ஆனந்த் மரணமடைந்த தகவலை அறிந்த நடிகர் சூர்யா முதல் ஆளாக அஞ்சலி செலுத்த மருத்துவமனைக்கு சென்றார். மேலும் அவரது உடலை பெறுவதற்கான அத்தனை ஃபார்மாலிட்டிஸ்களையும் முடித்தார் சூர்யா.
We will miss you sir!! pic.twitter.com/Nqz2b0sqY2
— Suriya Sivakumar (Suriya_offl) April 30, 2021
மனமெங்கும் அதிர்வு
இந்நிலையில் கேவி ஆனந்த் மறைவு குறித்து உருக்கமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சூர்யா. அதில் தெரிவித்திருப்பதாவது, கேவி ஆனந்த் சார்.. இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மறைவு அறைந்து நினைவூட்டுகிறது. நீங்கள் இல்லை என்கிற உண்மை மனமெங்கும் அதிர்வையும் வலியையும் உண்டாக்குகிறது. ஏற்க முடியாத உங்கள் இழப்பின் துயரத்தில் மறக்க முடியாத நினைவுகள் அலை அலையாக உயிர்த்தெழுகின்றன.

நீங்கள் கொட்டிய உழைப்பு
நீங்கள் எடுத்தப் புகைப்படங்களில்தான் சரவணன் சூர்யாவான அந்த அற்புதத் தருணம் நிகழ்ந்தது. முன்பின் அறிமுகமில்லாத ஒருவனை சரியான கோணத்தில் படம்பிடித்துவிட வேண்டுமென, இரண்டு மணிநேரம் நீங்கள் கொட்டிய உழைப்பை இப்போதும் வியந்து பாரக்கிறேன். மெட்ராஸ் டாக்கீஸ் அந்த இரண்டு மணி நேரம் ஒரு போர்களத்தில் நிற்பதை போலவே உணர்ந்தேன்.

ரஷ்யன் ஆங்கிள் போட்டோ
நேருக்கு நேர் திரைப்படத்திற்காக நீங்கள் என்னை எடுத்த அந்த ரஷ்யன் ஆங்கிள் புகைப்படம்தான் இயக்குநர் திரு வசந்த், தயாரிப்பாளர் திரு மணிரத்னம் உள்ளிட்ட அனைவருக்கும் என் மீது நம்பிக்கை வர முக்கிய காரணம். புகைப்படத்தை விட பத்தாயிரம் மடங்கு பெரியதாக முகம் தோன்றும் வெள்ளித்திரையிலும் நடிகனாக என்னை படம் பிடித்ததும் நீங்கள்தான்.

எதிர்காலம் பிரகாசமானது
முதன்முதல் என்மீது பட்ட வெளிச்சம் உங்கள் கேமராவில் இருந்து வெளிப்பட்டது. அதன்மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. என்னுடைய திரையுலகப் பயணத்தில் உங்களின் பங்களிப்பு, வழிகாட்டலும் மறக்க முடியாதது. வளர்ச்சிக்கு நீ இதையெல்லாம் மாற்றிகொள்ள வேண்டும் என அன்புடன் அக்கறையுடன் சொன்ன வார்த்தைகள் இப்போதும் என்னை வழி நடத்துகின்றன.

நினைத்துப் பார்க்கிறேன்
இயக்குனராக அயன் திரைப்படத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பு ஒரு மாபெரும் வெற்றிக்காக காத்திருந்த எனக்குள் புதிய உத்வேகத்தை அளித்தது. அயன் திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்த நட்சத்திரமாக என்னை உயர்த்தியது என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
Recommended Video

இயற்கை செய்த முரண்
எனது முதல் திரைப்படத்தில் நீங்களும் உங்களின் கடைசி திரைப்படத்தில் நானும் பணியாற்றியது. இயற்கை செய்த முரண் எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார். இதயப்பூர்வமான நன்றி அஞ்சலி.. நினைவுகளுடன், சூர்யா.


Click it and Unblock the Notifications











