Suriya's Purananooru: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை இதுதானா.. வெளியான அப்டேட்!
சென்னை: நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். தற்போது படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தில் உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 43வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சூர்யாவின் சூரரைப் போற்று படம்: நடிகர் சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி இணைந்து சூரரைப் போற்று என்ற படத்தை கொடுத்திருந்தது. ஓடிடியில் வெளியான போதிலும் இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை விமர்சகர்களிடமும் ரசிகர்களிடையேயும் பெற்றது. பயோ பிக்காக வெளியான இந்தப் படம் தேசிய விருதுகளையும் அள்ளியது. சிறந்த நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், இயக்குநர் என இந்தப் படத்திற்கு அதிகமான தேசிய விருதுகள் கிடைத்தன.
மீண்டும் சுதா கொங்கராவுடன் கூட்டணி: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் சூர்யா, மீண்டும் சுதா கொங்கராவுடன் தன்னுடைய 43வது படத்திற்காக இணைந்துள்ளார். முன்னதாக சூரரைப் போற்று படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக இந்தியில் இயக்கி முடித்துள்ளார் சுதா கொங்கரா. அக்ஷய் குமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள இந்தப் படத்தில் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனிடையே சூர்யா -சுதா கொங்கரா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புறநானூறு டைட்டில்: இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. 1965 காலகட்டத்தில் தமிழகத்தை உலுக்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டு புறநானூறு படத்தின் கதைக்களத்தை சுதா கொங்கரா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் அறிவிப்பின்போதே உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு படத்தின் கதை உருவாகியுள்ளதாகவும் இந்த முறை பயோ பிக் இல்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிவி பிரகாஷ் 100வது படம்: படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் இசையமைப்பாளராக அவரது 100வது படம் என்பதால் மிகச்சிறந்த இசையை அவரிடமிருந்து ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மீனாட்சி சினிமாஸ் இணைந்து இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கவுள்ளது.

மீண்டும் நஸ்ரியா: நீண்ட நாட்களுக்கு பிறகு நஸ்ரியா இந்தப் படத்தின்மூலம் மீண்டும் நேரடி தமிழ் படத்தில் என்ட்ரி கொடுக்கவுள்ளதும் ரசிகர்களிடையே அதிகமான உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் சூர்யா அரசியல் ஆர்வம் கொண்ட கல்லூரி மாணவனாக நடிக்கவுள்ளதாகவும் அதற்காக தன்னுடைய உடலை மெருகேற்றும் வேலைகளில் சூர்யா ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் முன்னதாக மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த ஆயுத எழுத்து படத்தின் கதையை ஒத்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











