'ஒரு சகமனிதனாகவே என் கேள்வியை முன் வைத்தேன்'... தேசிய கல்விக் கொள்கை பற்றி சூர்யா விளக்கம்!
தேசிய கல்விக் கொள்கை குறித்து தான் ஏன் கருத்து கூறினேன் என நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தேசிய கல்விக் கொள்கை பற்றி ஒரு சகமனிதனாகவே தன் கேள்வியை முன் வைத்ததாக நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
தேசிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினரும், அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், கமல், சீமான் உள்ளிட்டோர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் ஏன் தேசிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்தேன் என்பதை நடிகர் சூர்யா வெளிப்படுத்தியுள்ளார்.

ஆதரவுக்கு நன்றி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கல்வி பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று எதிர் கருத்துகள் வந்தபோது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நலன் மீது அக்கறைகொண்டு என் கருத்துகளை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு கல்வி பணியில் தொடர்ந்து இயங்கும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள், கல்விக்கொள்கை பற்றிய விவாதங்களை முன்னெடுத்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

சகமனிதனாகவே
சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என்னுடைய கேள்வியை முன்வைக்கிறேன். தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நாட்டின் வளர்ச்சியிலும், மாணவர்களின் நலனிலும் அக்கறை கொண்ட கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவை பெறுவோம்.

கருத்து சொல்லுங்கள்
வரைவு அறிக்கை மீதான ஆக்கப்பூர்வமான கருத்துகளை கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவரும் இணையதளம் வழியாக இம்மாதம் இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசும் அனைத்து தரப்பின் கருத்துகளையும் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.

கல்வியே சிறகு
ஏழை மாணவர்களுக்கு கல்வியே உயரப் பறப்பதற்கான சிறகு. அது முறிந்து போகாமல் இருக்க அனைவரும் துணை நிற்போம்", என சூர்யா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











