Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அதிகார அத்துமீறலால் மக்கள் மனதை வெல்ல முடியாது.. சாத்தான்குளம் சம்பவத்துக்கு நடிகர் சூர்யா ஆவேசம்
சென்னை: அதிகாரத்தை மக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
Recommended Video
சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீசாரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நடிகர் சூர்யா அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மன்னிக்க முடியாத குற்றங்களைச் செய்தவர்களுக்கு கூட மரண தண்டனை கூடாது என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
சர்வதேச கவனத்தை ஈர்த்த சாத்தான்குளம் சம்பவம்.. பிரியங்கா, டாப்ஸி என பாலிவுட் பிரபலங்களும் கண்டனம்
லாக்கப் அத்துமீறல்
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், இரு அப்பாவி உயிர்களுக்கு மரணம் ஏற்படுத்தும் அளவிற்கு நிகழ்ந்த போலீசாரின் 'லாக்கப் அத்துமீறல்' காவல்துறையின் மாண்பை குறைக்கும் செயல். இது ஏதோ ஒரு இடத்தில் தவறி நடந்த சம்பவம் என்று கடந்து செல்ல முடியாது.
போலீசாரால் கொடூரமான தாக்குதலுக்கு ஆளான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரையும் அரசு மருத்துவர் பரிசோதனை செய்து, 'நலமாக இருப்பதாக' சான்று அளித்திருக்கிறார்.
கடமை மீறல் செயல்
நீதியை நிலைநாட்ட வேண்டிய மாஜிஸ்ட்ரேட், பாதிக்கப்பட்டவர்களின் நிலையை பரிசோதிக்காமல், 'இயந்திர கதியில்' சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சிறையில் நடத்தப்பட வேண்டிய சோதனைகளும் முறையாக நடக்கவில்லை. இத்தகைய 'கடமை மீறல்' செயல்கள், ஒரு குடிமகனின் உரிமையில் நம் 'அதிகார அமைப்புகள்' காட்டும் அலட்சியத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதனால் இதுபோன்ற 'துயர மரணங்கள்' ஒரு வகையான 'திட்டமிடப்பட்ட குற்றமாக' நடக்கிறது.
உலுக்கி இருக்கிறார்கள்
ஒருவேளை இருவரின் மரணம் நிகழாமல் போயிருந்தால், போலீசாரின் இந்தக் கொடூர தாக்குதல் நம் கவனம் பெறாமலேயே போயிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தாலும், 'போலீசாரை எதிர்த்தால் என்ன நடக்கும்' என்பதற்கான வாழும் சாட்சியாகி இருப்பார்கள். தங்கள் மரணத்தின் மூலம் தந்தை, மகன் இருவரும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி இருக்கிறார்கள்.
அவநம்பிக்கை
இந்த கொடூர மரணத்தில், தங்கள் கடமையை செய்யத் தவறிய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது, நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இதேபோல, 'தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது' என்கிற நம்பிக்கையை அரசாங்கமும், நீதி அமைப்புகளும் உருவாக்க வேண்டும். மாறாக, நமது 'அதிகார அமைப்புகள்' அவநம்பிக்கையையே ஏற்படுத்துகின்றன.
ஓய்வில்லாமல்
இரண்டு உயிர் போவதற்கு காரணமானவர்களுக்கு இதுதான் தண்டனையா?' என்று எழுந்த விமர்சனத்துக்குப் பிறகே, சம்பந்தப்பட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். காவல்துறையில் அர்ப்பணிப்புடன் தன் கடமையை செய்கிற பலரை தனிப்பட்ட முறையில் நன்கு அறிவேன். ஒட்டுமொத்த நாடும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து நிற்கிற இந்த நேரத்திலும் ஓய்வில்லாமல் மக்களின் நலனுக்காக காவல்துறையினர் உழைக்கின்றனர்.
கடும் கண்டனங்கள்
'கொரோனா யுத்தத்தில்' முன் வரிசையில் நிற்கிற காவல்துறையினருக்கு தலைவணங்குகிறேன். அதேநேரம், அதிகாரத்தை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தும் காவல்துறையினருக்கு எனது கடும் கண்டனங்கள். அதிகார அத்துமீறல், வன்முறையால் ஒருபோதும் மக்களின் மனதை வெல்ல முடியாது. அன்பும், அக்கறையும் கொண்டு கடமையை செய்கிற காவல்துறையினரே மக்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். ஒரே நேரத்தில் இரண்டு உயிர்கள் பலியாகி இருப்பது, ஒரு குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
நீதி நிலைநிறுத்தப்படும்
தந்தையையும், மகனையும் இழந்து வாடுகிற அந்த குடும்பத்தினரின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். இனிமேலும் இதுபோன்ற 'அதிகார வன்முறைகள்' காவல்துறையில் நிகழாமல் தடுக்க, தேவையான மாற்றங்களை, சீர்திருத்தங்களை அரசும், நீதிமன்றமும், பொறுப்புமிக்க காவல் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். குற்றம் இழைத்தவர்களும், அதற்கு துணை போனவர்களும் விரைவாக தண்டிக்கப்பட்டு 'நீதி நிலைநிறுத்தப்படும்' என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.