Surya: லோகேஷின் கனவு திரைப்படம்.. பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் இரும்புக்கை மாயாவி!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா படம், வெற்றிமாறன் படம் என சூர்யாவின் லைன் அப் சிறப்பாக உள்ளது.
இதனிடையே லோகேஷ் இயக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட இரும்புக்கை மாயாவி படமும் இந்த லைன் அப்பில் இணைந்துள்ளது.

இரும்புக்கை மாயாவி படத்தின் அப்டேட் வெர்ஷனை சூர்யாவிடம் பேசிய லோகேஷ்: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சிறப்பான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார் சிவா. இந்தப் படத்தின் டைட்டில் டீசர், சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் களைகட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கராவுடன் தனது சூர்யா 43 படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கதைக்களம் அமையவுள்ளதாக முன்னதாக சுதா கொங்கரா பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்திலும் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளதாகவும் இந்த இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அறிவிக்கப்பட்டு ட்ராப்பானது இரும்புக்கை மாயாவி படம். இந்தப் படம் தன்னுடைய கனவு திரைப்படம் என்று முன்னதாக லோகேஷ் தனது பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் கதையை 10 ஆண்டுகள் முயற்சியில் தான் உருவாக்கியதாகவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தை மீண்டும் கையிலெடுக்க லோகேஷ் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்தப் படத்தின் அப்டேட் ஸ்கிரிப்டை சமீபத்தில் அவர் சூர்யாவிற்கு கூறியதாகவும் சூர்யாவும் கதையில் மிகுந்த இம்ப்ரஸ் ஆனதாகவும் கூறப்படுகிறது. கோலிவுட்டில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளான இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டான அளவில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் The Steel Claw என்ற பெயரில் வெளியான காமிக்ஸ் கதைதான் தமிழில் மொழிப் பெயர்க்கப்பட்டு இரும்புக்கை மாயாவி என்ற பெயரில் ரசிகர்களை கவர்ந்தது. 70, 80களில் இந்த காமிக்ஸ் கதை வெளியாகி அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இந்த கதையை திரைப்படமாக இயக்க பிரபல இயக்குநர்களும் ஆர்வம் காட்டிய நிலையில், சூர்யாவை வைத்து இந்தப் படத்தை அறிவித்தார் லோகேஷ். ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படம் ட்ராப் ஆனது. தற்போது இந்தப் படம் குறித்து மீண்டும் பேசிவருகிறார் லோகேஷ் கனகராஜ்.


Click it and Unblock the Notifications











