விஜய் பாணியில் இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா… படக்குழுவினருக்கு தங்க காசுகள் கிப்ட்
சென்னை: நடிகர் சூர்யா படக்குழுவினருக்கு தங்கக்காசுகள் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். சூரரை போற்று திரைப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளில் 150 பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பவுன் தங்க காசுகளை அன்பளிப்பாக கொடுத்து அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காட வைத்திருக்கிறார்.
ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் அதை கொண்டாடுவதற்காகவே, அதில் நடித்த முன்னணி நடிகர்கள் அந்த படத்தின் இயக்குநருக்கு விலை உயர்ந்த காரை பரிசளிப்பது வழக்கம். அந்த அணுகுமுறை கொஞ்சம் மாறி, படப்பிடிப்பு முடிந்த உடனே அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் அன்பு பரிசுகளை அளிப்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த அணுகுமுறையை முதலில் ஆரம்பித்து வைத்தவர் நடிகர் விஜய். அவரைத் தொடர்ந்து இப்போது நடிகர் சூர்யாவும் அந்த அணுகுமுறையை பின்பற்றத் தொடங்கிவிட்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, சாயிஷா, ஆர்யா உள்ளிட்டோர் நடித்த காப்பான் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த படத்தை தொடர்ந்து சூர்யா சூரரை போற்று என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் சூப்பர் ஹிட்டான இறுதி சுற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கரா தான் சூர்யாவை வைத்து சூரரை போற்று எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி. சென்னை, டெல்லி, ஐதராபாத், மதுரை போன்ற இடங்களில் படப்பிடிப்பு மற்றும் சண்டை காட்சிகள் நடைபெற்று வருகிறது. படத்தில் இடம்பெறும் முக்கியமான சில காட்சிகளுக்கான படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகர் சூர்யா, படப்பிடிப்பின் இறுதி நாளில் ஒரு இன்ப அதிர்ச்சியை படக்குழுவினருக்கு அளித்துள்ளார். இத்திரைப்படத்தில் பணியாற்றும் 150 படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு பவுன் தங்க காசுகளை அன்பளிப்பாக வழங்கி அவர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார். இதை பெற்று கொண்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப்போய் நிற்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், பிகில் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் அந்த படக்குழுவினர் 450 போர்களுக்கு பிகில் என்று பொறிக்கப்பட்ட தங்க மோதிரங்களை அன்பளிப்பாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவேகம், விசுவாசம், வீரம் போன்ற திரைப்படங்களில் அஜித்தை இயக்கிய சிவா தற்போது சூர்யாவை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் ஹரி, இயக்குனர் பாலா உள்ளிட்டோரும் சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளார்களாம். இதில் யாருடைய படத்தில் சூர்யா நடிப்பார். எது முதலில் வெளிவரும், என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











