கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருது… கண்கலக்கி நெகிழ்ந்தேன்... தலைவாசல் விஜய்யின் கலகல பேட்டி !
சென்னை : தலைவாசல் விஜய் சுமார் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தமிழக மக்கள் நெஞ்சங்களில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் தலைவாசல் விஜய். இவர் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் அழுத்தமானதாகவும், மனதில் பதியக்கூடியதாகவும் இருக்கும்.
சாமானிய மனிதனாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் விஜய். ஒரு பக்கம் குடும்பம், மற்றொரு பக்கத்தில் மனதில் பதியமிட்ட சினிமா ஆசை. இரண்டிலும் சமமாக பயணம் செய்து இன்று உச்சத்தை எட்டியுள்ளார் தலைவாசல் விஜய்.

1992ம் ஆண்டு தலைவாசல் திரைப்படத்தின் மூலம் தனது சினிமா கனவை கனவாக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவாசல் விஜய் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டு வருகிறார். தேவர் மகன், மகாநதி, மகளிர் மட்டும் என எந்த கதாபாத்திரம் என்றாலும் அதில் கனகச்சிதமாக பொருந்தி நடித்து வெற்றி வாகை சூட்டி வருகிறார் தலைவாசல் விஜய்.
இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்னோடியாக இருக்கும் தலைவாசல் விஜய் பற்றி பல சுவாரசியமான தகவல்களை இந்த நேர்காணலில் பார்க்கலாம்.
கேள்வி : மலையாள திரைப்படமான யுகபுருஷன் திரைப்படத்தில் நாராயண குரு கதாபாத்திரம் பற்றியும்... அதில் மறக்க முடியாத சம்பவங்கள் பற்றி..
பதில் : என் வாழ்க்கையில் மறக்க முடியாத திரைப்படம் யுகபுருஷன். நாராயண குரு அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடித்தது எனக்கு பெருமையான ஒன்று. மேலும் அந்த படத்தின் படப்பிடிப்புக்கு 4 மணி நேரம் மேக்கப் போடப்படும். அந்த திரைப்படம் மலையாள திரை உலகில் என்னை அடையாளப்படுத்தியது என்றார். மேலும், கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதையும் யுகபுருஷன் பெற்றுத்தந்தது என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கேள்வி : யுகபுருஷன் திரைப்படத்திற்காக கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றிருக்கீங்க... இந்த தகவலை நீங்க கேட்டப்போது எவ்வளவு சந்தோஷப்பட்டிங்க?
பதில் : எல்லை இல்லா மகிழ்ச்சியாக இருந்தது, மகிழ்ச்சியில அழுதேன். என் மனைவியும் கண் கலங்கினார். என் அப்பா, என்னை பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி என்று சொன்னார். அந்த தருணம் மிகவும் இனிமையான தருணமாக இருந்தது.

கேள்வி : தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகால திரைப்பயணத்தில் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து எந்த விருதும் கிடைக்கவில்லை. இதை நினைத்து என்னைக்காவது பீல் பண்ணி இருக்கீங்களா?
பதில் : நிச்சயமா பீல் பண்றேன், இப்போ வரைக்கும் பீல் பண்ணிட்டு இருக்கேன். ஆனால் நிச்சயம் வருங்காலங்கலில் விருதை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











