துப்பாக்கியை கையில் எடுக்கும் காவல்துறை.. என்கவுண்டர் குறித்து பேசிய நடிகர் விஜய் ஆண்டனி!
சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர் என பல்வேறு தளங்களில் தமிழில் பயணம் செய்து வருபவர் விஜய் ஆண்டனி. அவரது நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் முன்னதாக விஜய் ஆண்டனி அதிகமாக ஈடுபட்டிருந்தார்.
இந்த பிரமோஷன்களில் ஹிட்லர் படம் குறித்தும் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் தன்னுடைய இசை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை சுவாரசியங்களுடன் பேசியிருந்தார். இந்நிலையில் காவல்துறையில் நீண்ட காலங்களாக இருக்கும் என்கவுண்டர் குறித்தும் விஜய் ஆண்டனி தன்னுடைய கருத்தை கூறியதை பார்க்க முடிந்தது.

நடிகர் விஜய் ஆண்டனி: இசையமைப்பாளராக தன்னுடைய கேரியரை தமிழ் சினிமாவில் துவங்கிய விஜய் ஆண்டனி, தொடர்ந்து நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர் என பல்வேறு தளங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது அடுத்தடுத்த படங்கள் குறுகிய கால இடைவெளிகளில் வெளியாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரோமியோ, மழை பிடிக்காத மனிதன் என அடுத்தடுத்த படங்களை கொடுத்திருந்த விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது ஹிட்லர் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.
ஹிட்லர் படம்: மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் முன்னதாக வானம் கொட்டட்டும், படைவீரன் ஆகிய படங்கள் வெளியாகி கவனம் பெற்றுத் தந்துள்ளன. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஹிட்லர் படம் ரசிகர்களை கவர தவறியுள்ளது. படம் மிகவும் அரதப்பழசான கதைக்களத்தையே கையில் எடுத்துள்ளது. காட்சி அமைப்புகளிலும் ரசிகர்களை கவர இயக்குநர் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கம்போல இந்தப் படத்திலும் இயக்குநர் கௌதம் மேனன் போலீஸ் அதிகாரியாகவே நடித்துள்ளார்.
என்கவுண்டர் குறித்து கருத்து: இந்தப் படம் ரசிகர்களை அதிகளவில் கவரவில்லை என்றபோதிலும் இந்தப் படத்திற்காக அதிகப்படியான பிரமோஷன்களில் முன்னதாக நடிகர் விஜய் ஆண்டனி ஈடுபட்டிருந்தார். படம் குறித்து பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்துக் கொண்டார். தன்னுடைய இசை, அடுத்தடுத்த படங்கள், தன்னுடைய படங்களின் வித்தியாசமான தலைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் பேசினார். இதனிடையே தமிழ்நாட்டில் என்கவுண்டர் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த அவர், தவறுகள் கைமீறும்போது அதை தடுக்க முடியாமல் தன்னை பாதுகாத்துக் கொள்ள காவல்துறை துப்பாக்கியை கையில் எடுப்பதாகவும் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
தமிழகத்தில் என்கவுண்டர்: தமிழ்நாட்டில் என்கவுண்டர் நீண்ட நாட்களாக உள்ளதாக தெரிவித்துள்ள விஜய் ஆண்டனி, தன்னுடைய கல்லூரி காலத்தில் கல்லூரி வாசலில் வைத்து ஒரு ரவுடியை போலீசார் சுட்டதாகவும் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் கண்டெயினரில் தமிழகம் வழியாக தப்பிக்க முயன்ற வடமாநில கொள்ளையர்களை நோக்கி காவல்துறையினர் மேற்கொண்ட என்கவுண்டரில் வடமாநில கொள்ளையன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான். இந்நிலையில் என்கவுண்டர் குறித்து விஜய் ஆண்டனி தற்போது பேசியுள்ளார். இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் போலி என்கவுண்டரை மையமாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











