Kolai: டிடெக்டிவாக களமிறங்கும் விஜய் ஆண்டனி.. கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சென்னை: நடிகர் விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் காட்டி வருகிறார்.
இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படம் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் இவருக்கு பெற்றுத் தந்தது.
இந்நிலையில் தன்னுடைய அடுத்தப்படமான கொலை படத்தின் ரிலீஸ் தேதியை அவர் தற்போது அறிவித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

விஜய் ஆண்டனியின் கொலை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: நடிகர் விஜய் ஆண்டனி கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். தொடர்ந்து இவர் ஹீரோவாகவும் மாறி ரசிகர்களை கவர்ந்தார். இவரது ஆரம்பகால படங்கள், நான், சலீம் போன்றவை க்ரைம் திரில்லர் பாணியில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து தன்னை கமர்ஷியல் ஹீரோவாகவும் இவர் வெளிப்படுத்தி பல படங்களில் நடித்து வருகிறார்.
இன்றைய தேதியில் தமிழில் அதிகமான படங்களில் நடித்துவரும் ஹீரோக்களில் விஜய் ஆண்டனியும் ஒருவர். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் சமீபத்தில் பிச்சைக்காரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக சசி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அம்மா சென்டிமெண்ட் சிறப்பாக பயன்படுத்தப்பட்டது. தன்னுடைய அம்மாவிற்காக ஒருவன் ஒரு மண்டலம் பிச்சைக்காரனாக மாற முடியுமா என்ற வியப்பை இந்தப் படம் ஏற்படுத்தியது.
தொடர்ந்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை சசியே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மற்றொரு படத்தில் பிசியாக இருந்ததால், வேறு சில இயக்குநர்களையும் கேட்டு, அதுவும் கைகொடுக்காத நிலையில், தானே படத்தை இயக்கி தற்போது படத்தை வெற்றிப்படமாக்கியுள்ளார் விஜய் ஆண்டனி. இந்தப் படத்தில் அண்ணன் -தங்கை சென்டிமெண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில் பாலாஜி குமாரின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள கொலை படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண்ணின் கொலை வழக்கை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாகியுள்ளது. படத்தில் மீனாட்சி சவுத்ரி, ரித்திகா சிங், மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தில் விஜய் ஆண்டனி, இந்தப் படத்தை துப்பறியும் டிடெக்டிவ் கேரக்டரில் நடித்துள்ளார்.

முன்னதாக படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது இந்தப் படம் ஜூலை 21ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய் ஆண்டனியும் ரிலீஸ் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தை இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. ஹாலிவுட் தரத்தில் இந்தப் படம் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதை உண்மையாக்கும் வகையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெயிலரில் நடிகை ராதிகா, கையில் சிகரெட்டுடன் மாடர்ன் லுக்கில் இருந்தது விமர்சனங்களையும் எழுப்பத் தவறவில்லை.


Click it and Unblock the Notifications











