Vijay: மாநாடு முடிஞ்சாச்சு.. அடுத்தது என்ன.. இந்த விஷயத்திற்காக தயாராகும் விஜய்!
சென்னை: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நேற்றைய தினம் மிகவும் பிரம்மாண்டமாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது. இதில் ஏறக்குறைய 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
நேற்றைய தினம் மாநாட்டில் விஜய்யின் பேச்சு அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அவருக்கு அரசியல் களத்தில் பேசத் தெரியாது என்று விமர்சித்தவர்களும் அவரது இந்த பேச்சால் வாயடைத்துப் போன சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது முதல் மாநாட்டை நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தவெக மாநாடு நேற்றைய தினம் மிகச் சிறப்பான வகையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு பல விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும் ஒரே இடத்தில் லட்சக்கணக்கான தொண்டர்களை ஒருங்கிணைத்து மாநாட்டை மிகச் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் நடிகர் விஜய். அவருக்கு அரசியல் களத்தில் பேச தெரியுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட நிலையில் நேற்றைய தினம் அவரது பேச்சு அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. தண்ணீர் கிடைக்கவில்லை, வெயில் தாக்கம் என்பது போன்ற சில விமர்சனங்களையும் இந்த மாநாடு பெற்றது.
தவெக முதல் மாநாடு: லட்சக்கணக்கான பேர் ஒரே இடத்தில் கூடும் நிலையில் இது போன்ற விஷயங்களை தவிர்க்க முடியாது என்பது யோசிக்க வேண்டிய விஷயம் தான். தவெக கட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக விஜய் முன்னதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஏற்ப அடுத்தடுத்த விஷயங்களை கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் மேற்கொண்டு வருகிறார். அதன் முதல் முயற்சியாகத்தான் நேற்றைய தினம் கட்சியின் முதல் மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்தின் ஷூட்டிங்கில் இணைய உள்ளார் நடிகர் விஜய். இந்த படத்தின் சூட்டிங் வரும் நவம்பர் 4ம் தேதி துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தளபதி 69 படம்: தளபதி 69 படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த மாதம் 5ம் தேதி இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், சென்னையில் பிரமாண்டமான செட் போடப்பட்டு படத்தின் பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங் ஐந்து நாட்கள் திட்டமிடப்பட்ட நிலையில் நான்கே நாட்களில் இதன் படப்பிடிப்பை இயக்குனர் ஹெச் வினோத் நிறைவு செய்திருந்தார். இதையடுத்து தன்னுடைய கட்சி மாநாடு காரணமாக தளபதி 69 படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கை விஜய் தள்ளி வைத்திருந்தார்.
அடுத்த ஆண்டில் ரிலீஸ்: அனிருத் இசையில் இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கலந்து இந்த படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படம் ரிலீசாகும் பட்சத்தில் அது கண்டிப்பாக விஜய்யின் அரசியல் பயணத்திற்கு, சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சியின் போட்டிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையொட்டி தளபதி 69 படத்தின் காட்சி அமைப்புகளும் பாடல்களும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











