தமிழகம் முதல் தெலங்கானா வரை..! லாரன்ஸ்.. அஜித்தை தொடர்ந்து ரூ 1.30 கோடி அள்ளிக்கொடுத்த விஜய்!
சென்னை: நடிகர் விஜய் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
Recommended Video
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெருங்கியுள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை உலகளவில் ஒரு லட்சத்து 77 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் இதுவரை 640 பேர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கின்றனர்.

ஊரடங்கு
இதனால் இந்தியாவில் வரும் 3ஆம் தேதி வரை நாடு முழுக்க ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

அரசுகள் கோரிக்கை
மத்திய மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து வருகின்றனர். ஆனால் தொழில்துறை முழுவதும் முடங்கியுள்ளதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள், மக்களுக்கு உதவும் வகையில் தொழிலதிபர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன.

நன்கொடை
சினிமாத்துறையை சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றன. தொழில் நிறுவனங்கள் பலவும் மத்திய மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. நடிகர்களும் நன்கொடைகளை அளித்து வருகின்றனர்.

ரூ. 1.30 கோடி அறிவிப்பு
இந்நிலையில் நடிகர் விஜய் இன்று கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியை வழங்கியிருக்கிறார். அதன்படி முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும்
பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயும் அறிவித்துள்ளார். இதேபோல் ஃபெஃப்சி அமைப்புக்கும் 25 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார் விஜய்.

அண்டை மாநிலங்கள்
அதோடு கேரளாவுக்கு 10 லட்சம் ரூபாயும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில அரசுகளுக்கு தலா 5 லட்சம் ரூபாயும் நிவாரண தொகையாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் இதுவரை நிவாரணம் வழங்காமல் இருந்தது பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

வாயடைப்பு
இந்நிலையில் இன்று மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி அண்டை மாநில அரசுகளுக்கும் உதவிக்கரம் நீட்டி, விமர்சித்தவர்களின் வாயை அடைத்துள்ளார். நடிகர் விஜய் தனது நற்பணி மன்றத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வருகிறார்.

நடிகர் அஜித்
ஏற்கனவே நடிகர் லாரன்ஸ் பிரதமர், முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் ரூபாய் என பல்வேறு அமைப்புகளுக்கு சேர்ந்து மூன்றரை கோடி ரூபாய்க்கு மேல் நிவாரணம் அறிவித்தார். இதேபோல் நடிகர் அஜித்தும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 50 லட்சம் என ஒன்றேகால் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











