கத்திக்கு எதிர்ப்பு.. போராட்ட அறிவிப்பு.. விஜய் வீட்டுக்குப் பாதுகாப்பு
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தை திரையிடக் கூடாது என்று கூறி பல்வேறு தமிழர் அமைப்புகள் கண்டனக் குரலும், போராட்ட அறிவிப்பையும் வெளியிட்டுள்ளதால் நடிகர் விஜய்யின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விஜய் நடித்து வெளியாக உள்ள கத்தி திரைப்படத்தை இலங்கையைச் சேர்ந்த லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர், இலங்கைத் தமிழர் ஆவார். அதேசமயம், இவர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இதனால் இப்படிப்பட்டவரின் படத்தில் விஜய் நடிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த சிலர் விஜய் வீட்டை முற்றுகையிடப் போவதாகத் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டுக்கு முன்பாக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் நேற்று குவிக்கப்பட்டனர்.
ஆனால் ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எந்த அமைப்பினரும் அப்பகுதியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபடவில்லை. இருப்பினும் சர்ச்சை இன்னும் ஒயாததால், விஜய் வீடு முன்பாக போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











