Vijay - அரசியல் ஆசையின் உச்சம்.. சினிமாவிலிருந்து விலகுகிறாரா விஜய்? ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்
சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் சினிமாவிலிருந்து மூன்று வருடங்களுக்கு ஒதுங்கவிருக்கிறார் என தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ்ம் சாண்டி மாஸ்டர், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.லலித்குமார் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம் தேதி ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

கட்டாய வெற்றி: நெல்சன் இயக்கத்தில் நடித்த பீஸ்ட், வம்சி இயக்கத்தில் நடித்த வாரிசு ஆகிய இரண்டு படங்களின் ரிசல்ட்டும் விஜய்க்கு பெரிய அப்செட்டை கொடுத்திருக்கின்றன. எனவே இந்தப் படம் மூலம் வெற்றியை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அவர். மாஸ்டர் படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றி கொடுத்தல் லோகேஷ் இந்த முறை விஜய்யுடன் கை கோர்த்திருப்பதால் கட்டாயம் வெற்றி உறுதி என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.
ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் தற்போது திருப்பதியில் நடந்துவருகிறது. அனேகமாக இதுதான் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்காக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கையும், நா ரெடி என்று தொடங்கும் ஃபர்ஸ்ட் சிங்கிளையும் அன்றைய தினம் படக்குழு வெளியிட்டது. அவை இரண்டும் பெரும் ட்ரெண்டாகின.
பிரச்னை: பாடலை விஜய் பாடியிருக்கிறார். அவருடன் அனிருத், அசல் கோளாறு உள்ளிட்டோரும் பாடியிருக்கின்றனர். லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் பாடலை எழுதியிருக்கிறார். சுமார் 2000 பேருடன் விஜய் நடனம் ஆடும்படி பாடல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விஜய்யின் வாயில் இருந்த சிகரெட்டும், வரிகளில் இருந்த போதை, வன்முறை தொடர்பான வரிகளும் பாடலுக்கு பிரச்னையை ஏற்படுத்தின. இதனையடுத்து போதைக்கு எதிரான வசனம் பாடலில் சேர்க்கப்பட்டது.
விஜய் 68: லியோ படத்துக்கு அடுத்ததாக விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதன்முறையாக விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. விரைவில் ஷூட்டிங் தொடங்கவிருப்பதாகவும் படம் அடுத்த வருட தீபாவளிக்கு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவிலிருந்து ஓய்வு: இந்நிலையில் வெங்கட் பிரபு படத்தில் நடித்து முடித்த பிறகு மூன்று வருடங்கள் விஜய் எந்தப் படத்திலும் நடிக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. அரசியல் ஆசையில் இருக்கும் விஜய் அதற்கான முதல் படியாக கடந்த மாதம் 234 தொகுதிளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மூன்று பேரை சந்தித்து ஊக்கத்தொகையையும், சான்றிதழையும் வழங்கினார்.
சட்டப்பேரவைத் தேர்தல்: அவரது இந்த செயல்பாடும், விஜய் மக்கள் இயக்கம் செய்யும் பிற நலத்திட்ட உதவிகளுக்கும் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக மவுசு ஏறிக்கொண்டிருக்கிறது. எனவே இப்போதிலிருந்து அச்சாரம் போட்டு உழைத்தால்தான் 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி குறிப்பிடத்தகுந்த பெயரை பெற முடியும் என விஜய் நினைப்பதாகவும் அதனால் மூன்று வருடங்கள் சினிமாவுக்கு டாட்டா சொல்லலாம் என்ற முடிவில் இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











