Jananayagan Audio Launch: விஜயின் குட்டி ஸ்டோரி என்ன? ஆர்வத்துடன் காத்திருக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜனநாயகன் திரைப்படம் 9ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இன்று மலேசியாவில் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் தளபதி விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வாக உள்ளனர்.
இசைவெளியீட்டு விழாவில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்டு ரசிப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. புலி திரைப்படத்தில் குட்டி கதை சொல்ல ஆரம்பித்த விஜய் பிகில் படத்தில் இசை வெளியீட்டு விழாவில் குட்டி ஸ்டோரி ஒன்றை சொன்னார். அதாவது, பூக்கடையில் வேலை செய்யும் ஒரு பையனுக்கு திடீரென வேலை போய் விட்டது. அந்த பையனுக்கு வேண்டிய ஒருவர் பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்து விடுகிறார். கடையில் ஒரு பட்டாசு கூட விற்கவில்லை. என்னடா நடக்குதுனு வந்து பார்த்தால், அந்த பையன் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வாளியில் தண்ணீர் எடுத்து வந்து, பூக்கள் மீது தெளிப்பது போல பட்டாசு மீது தெளித்துள்ளான். அவனை சொல்லி குற்றமில்லை. அவன் தொழில் பக்தி அந்த மாதிரி. அதனால் யார் யாருக்கு என்ன திறமை இருக்கிறதோ அந்த வேலையை அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தார்.

குட்டி ஸ்டோரி: விஜய் சொன்ன இந்த குட்டி கதை இணையத்தில் பரவலாக டிரெண்டானது. கடைசியாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கதை சொல்லி இருந்தார். அதன் பிறகு லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா பாதுகாப்பு காரணமாக நடத்த முடியாமல் போனது. தற்போது ஜனநாயகன் கடைசி திரைப்படம் என்பதால், இந்த திரைப்படத்தில் விஜய் என் குட்டி கதையை சொல்லப்போகிறார் என அவரின் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
பிரம்மாண்ட ஏற்பாடு: இன்று மதியம் 3:30 மணியளவில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் உள்ள புகீத் ஜலில் மைதானத்தில் நடைபெற உள்ளது. 80,000 முதல் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மலேசியா காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி கொடி, துண்டு, உடை, பேட்ஜ், டீ ஷர்ட் உள்ளிட்ட அரசியல் கட்சி சம்பந்தமான எந்த பொருட்களுடனும் இசை வெளியீட்டு விழாவிற்கு கொண்டு வரக்கூடாது என கட்டுப்பாடுகளை போட்டுள்ளது. மேலும் அரசியல் தொடர்பாக பேசக்கூடாது என விஜய்க்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜனநாயகன் திருவிழா: இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக விஜய் நேற்றே தனி விமானம் மூலம் மலேசியா சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய்யின் அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நேற்றே மலேசியா சென்றுவிட்டார். அனிருத், ஸ்வேதா மோகன், நடிகை பூஜா ஹெக்டே, இயக்குநர் நெல்சன் மற்றும் அட்லி ஆகியோர் மலேசியாவிற்கு சென்றுள்ளனர். இந்த இசைவெளியீட்டு விழாவில் அனுராதா ஸ்ரீராம், க்ரிஷ், சைந்தவி, ஹரிசரண் மற்றும் திப்பு உள்ளிட்ட பாடகர்கள் விஜய் நடித்த படங்களிலிருந்து பாடல்களை பாட உள்ளனர். இதனால், மலேசியா திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.


Click it and Unblock the Notifications











