TVK Vijay: நாளைய தீர்ப்பைத் தீர்மானிப்பாரா விஜய்? ப்ளானிங் எல்லாம் வேற லெவலில் இருக்கு!
சென்னை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் வசூல் மன்னன். அதிக சம்பளம் வாங்கும் நடிகர். விமர்சகர்களால் படம் பாராட்டைப் பெறவில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு லாபத்தை சம்பாதித்துக் கொடுக்கும் ஒரே நடிகர் விஜய் மட்டும்தான். இப்படி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தான் தொடங்கிய கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என முதலில் அறிவித்த விஜய், கட்சிப் பெயரில் எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டிய பின்னர், தமிழக வெற்றிக் கழகம் என பெயரைத் திருத்தி அறிவித்தார்.
ஒரு கட்சியின் தலைவராக தனது கட்சியின் பெயரில் பிழை உள்ளது என சுட்டிக்காட்டியதும், அதனை அவர் திருத்திக் கொண்டதை பலரும் பாராட்டினர். இதுமட்டும் இல்லாமல், தனது கட்சிக்குள் ஒருவர் உறுப்பினராக இணைகின்றார் என்றால், கட்சியின் உறுதிமொழியைப் படித்து உறுதி ஏற்றுக்கொண்ட பின்னர் கட்சியில் இணையலாம் எனக் கூறி அனைவரையும் கவர்ந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யின் திரை உலக பயணம் தொடங்கியதில் இருந்து அவரது அரசியல் எண்ட்ரி வரை ஒரு குட்டி ரீவைண்டாக இந்த தொகுப்பில் காணலாம்.

நடிகர் விஜய் கதாநாயகனாக நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், இதற்கு முன்னர் வெற்றி என்ற படத்தின் மூலம், குழந்தை நட்சத்திரமாக நடித்தார். விஜய்க்கு தொடக்கத்தில் சில படங்கள் சரியாகப் போகவில்லை. அதன் பின்னர் செந்தூரப் பாண்டி என்ற படத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்து, தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியது மட்டும் இல்லாமல், இன்று தனது கட்சியின் கொடியினை அறிமுகம் செய்யும் முன்னர், விஜய்காந்த்தின் குடும்பத்தினரைச் சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள படமான தி கோட் படத்தில் விஜயகாந்த் நடித்துள்ளதைப் போல் ஏ.ஐ. தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதற்கு நன்றி கூறுவதற்காக எனக் கூறினாலும், விஜய் தனது அரசியல் நகர்வையும் மனதில் வைத்துதான் சென்றதாக கூறப்படுகின்றது.

சர்கார்: விஜய் தான் வளர்ந்து வந்த காலத்தில் தமிழன் படத்தில் அதிரடியாக அரசியல் பேசி இருப்பார். இதில் நேரடியாக அரசியல்வாதிகளை தாக்கி பேசவில்லை என்றாலும், தான் உச்ச நட்சத்திரமான பின்னர் அரசியல்வாதிகளை நேரடியாகத் தாக்கிப் பேசினார். குறிப்பாக மெர்சல், சர்கார் படங்கள் இவரது அரசியல் வருகையை அன்றே தீர்மானித்த படங்களாக கருதப்படுகின்றது. சர்கார் படத்தில் நேரடியாகவே அதிமுக கட்சியைத் தாக்கி படம் எடுத்து அரசியல் தளத்தில் அதிர்வினை ஏற்படுத்தினார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசியதாகவே கூறப்பட்டது. குறிப்பாக அவர் கூறிய குட்டிக் கதை மற்றும் திருக்குறள் முன்னாள் முதலமைசர் எடப்பாடி பழனிசாமியை தாக்கிப் பேசியதாகவே கூறப்பட்டது.

தளபதி 69: விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் தி கோட். இந்தப் படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதையடுத்து இவரது 69வது படம் விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஏற்கனவே தி கோட் படத்தில் அரசியல் காட்சிகள் எதுவும் இல்லை என இயக்குநர் வெளிப்படுத்தி இருந்தார். அதேபோல், 69வது படமும் ஜனரஞ்சகமான படமாகத்தான் இருக்கும் என அந்தப் படத்தின் இயக்குநர் ஹெச். வினோத் தெரிவித்திருந்தார். இந்தப் படம்தான் விஜய் நடிக்கவுள்ள கடைசி படம். அதன் பின்னர் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்தப் போகின்றார். இதனால் இவரது இரண்டு படங்கள் மீதும் பெரும் கவனம் விழுந்துள்ளது.
கட்சிக் கொடி: இந்நிலையில் இன்று தனது கட்சியின் கொடியை விஜய் அறிமுகம் செய்யவுள்ளதால், பலரது கவனம் விஜய் பக்கம் திரும்பியுள்ளது. குறிப்பாக, கொடியின் நிறம் எவ்வாறு இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது மட்டும் இல்லாமல், கொடியில் சின்னம் எதாவது இடம் பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் இருந்து அரசியல் களத்திற்குச் செல்வது என்பது இது புதிதான விஷயம் இல்லை என்றாலும், இதை கரை சேர்ந்தவர்கள் மிகவும் சிலரே. அந்த வகையில் எம்.ஜி.ஆர் மற்றும் விஜயகாந்த்தை குறிப்பிடலாம். எம்.ஜி.ஆர் மூன்று முறை முதலமைச்சர் ஆனார். விஜயகாந்த் தான் கட்சி ஆரம்பித்து இரண்டாவது தேர்தலில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் அவரது உடல் நிலை ஒத்துழைக்காததால் அரசியலில் தீவிரமாக செயல்பட முடியவில்லை.
எதிர்காலம்: இவர்கள் இருவரைக் கடந்து மற்றவர்கள் இருந்தாலும் அவர்களால் அரசியலில் இன்றைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. ரஜினி கட்சி தொடங்குவதாகக் கூறி பின் வாங்கினார். கமல் கட்சி தொடங்கிவிட்டு படங்களில் நடிப்பதில் பிசியாகி பார்ட்-டைம் அரசியல்வாதியாக செயல்பட்டு வருகின்றார் என்ற விமர்சனத்திற்கு ஆளாகி வருகின்றார். இப்படியான நிலையில் களமிறங்கும் விஜய்க்கு எதிர்காலத்தில் தமிழ்நாடு மக்கள் என்ன தர காத்துள்ளார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.


Click it and Unblock the Notifications











