எளிய மக்களின் போராட்டத்தை எடுத்துரைத்த படைப்பாளி.. எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்.. பிரபல நடிகர் உருக்கம்!
சென்னை: மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி மரியாதை செலுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குநர் எஸ்பி ஜனநாதன். இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தேசிய விருது இயக்குநரானார். தொடர்ந்து ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

போஸ்ட் புரடெக்ஷன்
ஜெயம் ரவியின் நடிப்பில் வெளியான பூலோகம் படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றியுள்ளார். கடைசியாக விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்கின.

மார்ச் மாதம் மரணம்
எடிட்டிங் பணியில் ஈடுபட்டிருந்த போதுதான் இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பி ஜனநாதனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டு கடந்த 14 ஆம் தேதி உயிர்பிரிந்தது.

எஸ்பி ஜனநாதன் பிறந்தநாள்
அவருடைய திடீர் மரணம் தமிழ் சினிமாவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் இன்று இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதி மரியாதை செலுத்தியுள்ளார்.
எளிய மக்களின் போராட்டம்
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, எளிய மக்களின் போராட்டத்தை என்றும் எடுத்துரைத்த படைப்பாளி மக்கள் இயக்குனர் ஏஸ்.பி. ஜனநாதன் பிறந்த தினத்தில் வணங்குகிறோம் - லாபம் திரைபடக்குழு என குறிப்பிட்டுள்ளார்.

உழைப்பாளர் தினத்திலும்
அவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் மறைந்த இயக்குநர் எஸ்பி ஜனநாதனுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். உழைப்பாளர் தினத்தன்றும் எஸ்பி ஜனநாதனின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











