ஆரம்பமே பிரச்சினை.. கிரிக்கெட் வீரர் முரளிதரன் படத்தில் இருந்து விலகுகிறாரா விஜய் சேதுபதி?
முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகுவது பற்றி ஆலோசித்து வருகிறாராம் விஜய் சேதுபதி.
சென்னை: கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில் இருந்து விலகலாமா என விஜய் சேதுபதி ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
சமீபகாலமாக பிரபலங்களின் வாழ்க்கையைப் படமாக்குவதில் இயக்குநர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அம்மாதிரியான படங்களில் நடிப்பதற்கு நடிகர்களுமே ஆர்வமாக உள்ளனர். காரணம், ஏற்கனவே பிரபலமானவர்களின் படங்களில் நடிப்பதன் மூலம் எளிதாக வெற்றி அடைய முடியும் என்பதான்.

அந்தவகையில், இந்திய கிரிக்கெட் முன்னாள் கேப்டன்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோரின் வாழ்க்கை திரைப்படங்களாக எடுக்கப்பட்டு, மாபெரும் வெற்றி பெற்றது. கபில்தேவ் உலக கோப்பையை வென்றதை வைத்து '83' என்ற பெயரில் படம் தயாராகி வருகிறது.
இந்த வரிசையில், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்த இலங்கை கிரிக்கெட் பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையையும் படமாக எடுக்க இருக்கின்றனர். இப்படத்தில் முரளிதரன் வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். படத்துக்கு '800' எனத் தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை ஸ்ரீபதி ரங்கசாமி டைரக்டு செய்கிறார். ஆனால் இப்பட அறிவிப்பைத் தொடர்ந்து, முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியது.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியிட்ட அறிக்கையில் "முரளிதரன் கண்டியில் பிறந்த தமிழராக இருந்தாலும் சிங்களராகவே வாழ்ந்து வருகிறார். விடுதலைப்புலிகள் போராடியபோது சிங்களர்கள் பக்கம் நின்று துரோகம் செய்தார். அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை ஈழத்தமிழர்கள் ஏற்கமாட்டார்கள்" எனத் தெரிவித்திருந்தனர்.
சமூகவலைதளங்களில் விஜய் சேதுபதி முரளிதரனாக நடிப்பது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இது தொடர்பாக பல கருத்துக்களைப் பதிவிட்டனர்.
இப்படியாக தொடர் எதிர்ப்புகள் இருந்து வருவதால், இந்தப் படத்தில் நடிக்க வேண்டுமா என்ற யோசனையில் விஜய் சேதுபதி இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாகவே சர்ச்சைகளில் அதிகம் சிக்காதவர் விஜய் சேதுபதி. எனவே, இப்படம் மூலம் வாண்டடாக ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டுமா என யோசிக்கிறாராம். இது தொடர்பாக தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











