Actor Vijayakanth: விஜய் படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்த விஜயகாந்த்.. நன்றிக்கடனுக்கு இலக்கணம்!
சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும்வகையில் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பிற்பகலில் அவரது உடல் அவரது தேமுதிக அலுவலகத்திற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகள் ஒருபுறம் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
மக்களின் மனம் கவர்ந்த விஜயகாந்திற்கு நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். அவரது இழப்பு இந்திய அரசியலுக்கும் தமிழ் திரையுலகிற்கும் மிகப்பெரிய இழப்பு என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அவர் தன்னை எப்போதும் அண்ணே என்றுதான் கூப்பிடுவார் என்று நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் விஜய், விஜயகாந்த் உடலுக்கு மிகுந்த உருக்கத்துடன் அஞ்சலி செலுத்தியதை பார்க்க முடிந்தது. நடிகர்கள் கமல்ஹாசன், அஜித் உள்ளிட்டவர்களும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் விஜயகாந்த் கடந்த 1979ம் ஆண்டுமுதல் தொடர்ந்து 30 ஆண்டுகளை கடந்து நடித்தவர். மதுரையில் பிறந்த விஜயகாந்த், சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னை வந்து, அதிகமான போராட்டங்களுக்கு மத்தியில்தான் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். வில்லனாக இவரது பயணம் துவங்கினாலும் அழுத்தமான கதைக்களங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால், ஹீரோவாக ரசிகர்கள் இவரை கொண்டாடினர். சட்டம் ஒரு இருட்டறை போன்ற படங்கள், விஜயகாந்திற்கு தனிப்பட்ட அடையாளத்தை கொடுத்தது. தொடர்ந்து ஆக்ஷன் களங்களில் மட்டுமில்லாமல் ரசிகர்களை கவரும் வகையில் குடும்ப சென்டிமெண்ட் கதைகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகாந்த்.
அரசியல் சாம்ராஜ்யம்: அரசியலிலும் தன்னுடைய தனித்தன்மையை நிரூபித்தவர் விஜயகாந்த். தேமுதிக என்ற தனிக்கட்சியை துவங்கி தன்னுடைய அரசியல் சாம்ராஜ்யத்தை பலப்படுத்தியவர். தான் நினைக்கும் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவதில் தனிக்கவனம் பெற்ற விஜயகாந்த், அதிகமாக மற்றவர்கள்மீது கோபப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர்மீது யாரும் கோபப்பட்டதில்லை என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தான் நடிகராக இருந்தபோது, சாப்பாட்டு விஷயத்தில் பட்ட அனுபவங்களை மனதில் கொண்டு, தான் ஹீரோவானவுடன் அனைவருக்கும் தலைவாழை இலை போட்டு உணவு பரிமாறும்படி ஏற்பாடுகளை செய்தார்.
கருப்பு எம்ஜிஆர்: இவரது அலுவலகத்திற்கு வந்து யாரும் சாப்பிடாமல் போனதில்லை என்றும் யாரையும் பசியுடன் வெளியில் அனுப்ப மாட்டார் என்றும் பலரும் தற்போது தங்களின் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். விஜயகாந்தை போலவே வாய்ப்புகளை தேடி சென்னை வந்து, சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தத்தளித்த பலருக்கு வேடந்தாங்கலாக இருந்தவர் விஜயகாந்த். முன்னாள் முதல்வர் மறைந்த எம்ஜிஆருக்கு பிறகு இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்ட விஜயகாந்த், கருப்பு எம்ஜிஆர் என்றே பாராட்டப்பட்டார். மேலும் புரட்சிக் கலைஞர், கேப்டன் என்றும் ரசிகர்கள், தொண்டர்கள் இவரை கொண்டாடினார்கள்.
சம்பளம் வாங்காத விஜயகாந்த்: முன்னதாக எஸ்ஏசியின் இயக்கத்தில் உருவான படங்களின்மூலம் அதிகமான கவனத்தை பெற்றவர் விஜயகாந்த். இந்நிலையில் கடந்த 1993ம் ஆண்டில் தன்னுடைய மகன் விஜய்யை வைத்து செந்தூரப்பாண்டி என்ற படத்தை இயக்கினார் எஸ்ஏசி. இந்தப் படத்தில் விஜய்யின் வளர்ச்சிக்காக படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்தார் விஜயகாந்த். படமும் சிறப்பான வரவேற்பையும் கவனத்தையும் பெற்றது. தனது வெற்றிக்கு காரணமான இயக்குநர்களில் எஸ்ஏசியும் ஒருவர் என்பதால் செந்தூரப்பாண்டி படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த். இதுகுறித்து இயக்குநர் எஸ்ஏசியே தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
துணிச்சலும் கருணையும்: தான் வாழும் காலத்தில் அனைவருக்கும் நல்லவராக இருப்பது சாத்தியம் என்று நிரூபித்தவர் விஜயகாந்த். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை திட்டி கோபமாகவும் இழிவாகவும் பேசியவர்களையும் மன்னிக்கும் மனது அவருக்கு இருந்ததை பல சம்பவங்கள் மூலம் நிரூபித்துள்ளார். ஒரு கண்ணில் துணிச்சலையும் மறு கண்ணில் கருணையையும் கொண்டு வாழ்ந்தவர் அவர் என்ற பாராட்டுக்களையும் பார்க்க முடிந்தது.


Click it and Unblock the Notifications