தெலுங்கு ரசிகர்களை கவரத்தவறிய விஜய்யின் கோட் படம்.. மீண்டும் நடிகர் நானி காட்டில் மழை!
ஐதராபாத்: நடிகர் விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை சிறப்பாக கவர்ந்து வருகிறது. படத்தில் பல சுவாரசியங்களை இயக்குனர் வெங்கட் பிரபு இணைத்துள்ள போதிலும் படத்தில் கதைக்கு பஞ்சம் உள்ளதாக இந்தப் படம் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் கடந்த 4 நாட்களில் தமிழில் 288 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். ஆயினும் தெலுங்கில் மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை பெற்றுள்ள விஜய்க்கு இந்தப் படம் சரியாக கைக்கொடுக்கவில்லை. தெலுங்கு ரசிகர்களை கோட் படம் கவர தவறிவிட்டது.

நடிகர் விஜய்: விஜய்யின் கோட் படம் கடந்த 5ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. சில கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்றுள்ள நிலையிலும் தமிழில் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. கடந்த 4 நாட்களில் 288 கோடி ரூபாய்களை கோட் படம் வசூலித்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆயினும் தெலுங்கில் இந்த படம் ரசிகர்களை கவர தவறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் தெலுங்கு உரிமையை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 12 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியிருந்தது.
தெலுங்கு ரசிகர்களை கவராத கோட் படம்: இந்நிலையில் கோட் படம் முதல் இரண்டு நாட்களில் மட்டும் ரசிகர்களை திரையரங்கிற்கு வரவழைத்ததாகவும் இதன் மூலம் ஐந்து கோடி ரூபாய் வசூலித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு வராத நிலை காணப்படுகிறது. இதனால் தெலுங்கு நடிகர் நானி காட்டில் மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது. கடந்த மாதம் 29ம் தேதி நானியின் சரிபோதா சனிவாரம் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த நிலையில், விஜய்யின் கோட் படத்தின் ரிலீசால் நானி படத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
நானி காட்டில் மழை: ஆனாலும் தற்போது விஜய்யின் படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்கிற்கு வராத நிலையில் கோட் படத்தை தூக்கிவிட்டு அதற்கு பதிலாக மீண்டும் நானியின் சரிபோதா சனிவாரம் படத்தை திரையரங்குகள் ரிலீஸ் செய்து வருகின்றன. இதனால் சரிபோதா சனிவாரம் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களையும் திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே கேரளா மற்றும் கர்நாடகாவில் விஜய்யின் கோட் படம் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்து அடுத்தடுத்த காட்சிகளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனால் அங்கு படத்தின் வசூல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொண்டாட்டத்தில் தமிழ் ரசிகர்கள்: விஜய்யின் கோட் படத்தில் ரசிகர்கள் கொண்டாட பல விஷயங்களை இணைத்திருந்தார் வெங்கட் பிரபு. படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. 90களின் வெற்றிவிழா நாயகன் மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதனிடையே, திரிஷா, சிவகார்த்திகேயனின் கேமியோ கேரக்டர்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அழுத்தமான கதை இல்லாததால் படம் பல இடங்களில் திணறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் படம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











