TVK: கொஞ்சம் ஓவராத்தான் வேண்டிட்டாங்களோ.. மழை வெளுத்துவாங்கும்னு பார்த்தா.. வெயில் வாட்டி வதைக்குதே!
சென்னை: நடிகர் விஜய் 40 ஆண்டுகளை கடந்து குழந்தை நட்சத்திரமாகவும், ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். முன்னணி நடிகராக 200 கோடி ரூபாய்களுக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகராக இருந்து வரும் விஜய், சினிமாவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய தவெக கட்சியை அறிவித்த விஜய் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கென கடந்த சில வாரங்களாக, விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் என அனைவரும் ஒன்றிணைந்து பணிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து முடிந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தன்னுடைய உற்சாகத்துடன் கூடிய அறிவிப்பை வெளியிட்ட நடிகர் விஜய், தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தன்னுடைய கட்சி போட்டியிடும் என்றும் அறிவித்திருந்தார். தொடர்ந்து கட்சியை பலப்படுத்தும் பல பணிகளில் நடிகர் விஜய் மட்டுமில்லாமல் அவரது கட்சி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவரும் செயல்பட்டு வருகின்றனர். இன்றைய தினம் தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்கவுள்ளது.
தமிழக வெற்றிக்கழக மாநாடு: விழுப்புரத்தின் வி சாலை கிராமத்தில் நடக்கவுள்ள இந்த மாநாட்டில் விஜய் தனது முதல் அரசியல் பேச்சை கொடுக்கவுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஏராளமான தொண்டர்கள், ரசிகர்கள் அங்கு வரத் துவங்கியுள்ளனர். மாநாட்டிற்கான பணிகள் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய அளவில் இந்த மாநாடு மிகப்பெரிய கவனத்தை பெற்றுள்ள நிலையில் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் கவனத்துடன் விஜய் மற்றும் கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கர்ப்பிணிகள், வயதானவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
சிறப்பு ஏற்பாடுகள்: மேலும் கூட்ட நெரிசலை முன்கூட்டியே அனுமானித்துள்ள விஜய், அதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். 50,000 பேர் உட்காரும் வகையில் இந்த மாநாட்டில் சேர்கள் போடப்பட்டுள்ளன. மேலும் 2.5 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்த்து, அதற்கேற்ற பல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக இந்த மாநாடு சிறப்பாக நடக்கும் வகையில் கோயில்களில் தவெக தொண்டர்கள் அன்னதானம் செய்ததை பார்க்க முடிந்தது. இதே போல மாநாடு நடக்கும் நாளில் விக்கிரவாண்டியில் மழை பெய்யாமல் இருப்பதற்காகவும் பல்வேறு நேர்த்திக்கடன்களையும் தொண்டர்கள் மேற்கொண்டனர்.
கொளுத்தும் வெயில்: இந்நிலையில் இன்றைய தினம் விக்கிரவாண்டியில் வெயில் மண்டையை பிளப்பதை பார்க்க முடிகிறது. மாநாட்டிற்காக முன்கூட்டியே வந்த தொண்டர்கள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தலையில் சேர்களை வைத்தபடி நடமாடுவதையும் மர நிழல்களில் தஞ்சம் அடைவதையும் பார்க்க முடிகிறது. இதையடுத்து தொண்டர்கள் மழை பெய்யக் கூடாது என்று கொஞ்சம் அதிகமாகவே வேண்டி விட்டார்களோ என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இன்றைய தினம் நடக்கவுள்ள மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்க விஜய் மட்டும் இல்லாமல் கட்சி நிர்வாகிகளும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதற்கு கால சூழலும் சிறப்பாக ஒத்துழைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











