Exclusive: கடவுளை பார்த்ததுபோல இருந்துச்சு.. தவெக மாநாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பாடகிகள்!
சென்னை: கடந்த இரு தினங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடந்து முடிந்துள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு. கடல் அலைபோல ஆர்ப்பரித்த தொண்டர்களுக்கு இடையில் தன்னுடைய அரசியல் கன்னிப் பேச்சை பேசினார் விஜய். அவரது பேச்சு அனைத்து தரப்பினரிடையேயும் பல விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
அவரது பேச்சில் முதிர்ச்சி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கமெண்ட்களை அவர் பெற்றாலும், தவெகவின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றிகரமாக எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. இது துவக்கமே என்பது போல தவெகவினர் தொடர்ந்து உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் சிறுவனாக, இளைஞனாக, கமர்ஷியல் ஹீரோவாக பல பரிணாமங்களை ரசிகர்கள் பார்த்துள்ளனர். இளைய தளபதியாக கொண்டாடப்பட்ட அவர் தளபதியாக உருமாறியதும் சிறப்பான தருணத்திலேயே நடந்தது. முன்னதாகவே அரசியல் நுழைவிற்கான அனைத்து விஷயங்களையும் தேர்ந்தெடுத்த திட்டங்களுடனேயே செயல்படுத்தி வந்தார் விஜய். மாணவர்களை கவர்வதால் அந்த குடும்பத்தையே கவரலாம் என்ற விஜய்யின் அரசியல் கணக்கு அவருக்கு சிறப்பாகவே அமைந்தது. மாணவர்களுக்கான அடுத்தடுத்த திட்டங்களை வெளியிட்ட அவர், ஒரு கட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தையும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு: தமிழக வெற்றிக் கழகம் மக்களவை தேர்தலில் போட்டியிடாது என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவித்திருந்த விஜய், தொடர்ந்து தளபதி 69 படம்தான் தன்னுடைய இறுதிப்படம் என்று கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தார். இதையடுத்து வெளியான கோட் படத்தை ரசிகர்கள் கொண்டாடவே செய்தனர். இதனிடையே இந்த மாதம் முதல் வாரத்தில் அவரது இறுதிப் படத்தின் சூட்டிங் பூஜையுடன் போடப்பட்டது. இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் பாடல் காட்சிக்கான சூட்டிங்குடன் நிறைவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட சூட்டிங் அடுத்தமாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது.

லட்சக்கணக்கான தொண்டர்கள்: இதனிடையே அவரது தவெகவின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 10 லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது. இதில் விஜய்யின் பேச்சு ஏராளமான தரப்பினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்து இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகள் விஜய் மேற்பார்வையில் செய்திருந்தனர். இவ்வளவு கூட்டத்தை சமாளிக்க தவெகவினர் சற்று திணறித்தான் போனார்கள். சரியான தண்ணீர் வசதி செய்யப்படவில்லை என்பது உள்ளிட்ட சில குறைகள் இருந்தபோதிலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாகவே நடத்தப்பட்டுள்ளது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பாடகிகள்: இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து சிறப்பாக அமைந்தது. இதை பின்னணி பாடகிகள் மதுமிதா மற்றும் பவதாயினி உள்ளிட்ட மூன்று பெண்கள் பாடியிருந்தனர். ஆர்ப்பரிக்கும் கூட்டத்திற்கிடையில் தாங்கள் பாடியது தங்களுக்கே கேட்கவில்லை என்றும் இதை முடித்துவிட்டு பின்னர் வீடியோவில் போய்தான் தாங்கள் பாடியதை பார்த்ததாகவும் கூறியுள்ளார். மதுமிதா மற்றும் பவதாயினி filmibeat tamilக்காக கொடுத்த பேட்டியில் தங்களது அறைக்கு பக்கத்து அறையில்தான் விஜய் தங்கியிருந்ததாகவும் அவருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக அவரது படங்களின் பாடல்களை உரக்க பாடியதாகவும் சிலிர்ப்புடன் தெரிவித்துள்ளனர்.
கடவுளாக தெரிந்த விஜய்: தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில்தான் விஜய்யை முதன்முதலில் பார்த்ததாகவும் அவரை பார்த்தது கடவுளை பார்த்தது போல இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர் தங்களை நேருக்கு நேர் பார்த்து வணக்கம் வைத்ததாகவும் மேடையிலும் தங்களை பார்த்து கீழே குனிந்து வணக்கம் சொன்னதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர். சுரபி என்ற இசையமைப்பாளர் மூலமாகவே இந்த வாய்ப்பு கிடைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக தாங்கள் பெரிதாக எதுவும் பயிற்சி மேற்கொள்ளவில்லை என்றும் தாங்கள் கூலாகவே இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மிகவும் டென்ஷனாக இருந்ததாகவும் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











