இத்தனை வருடங்கள்.. அத்தனை கனவுகள்.. திரையுலகில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்த நடிகர் விக்ரம்!
சென்னை : நடிகர் விக்ரம் கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெளியான என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்தப் படம் வெளியாகி தற்போது 32 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் விக்ரமும் தன்னுடைய சினிமா கேரியரில் 32 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார்.
இதையடுத்து அவர் தனது இந்தப் பயணத்திற்கு மற்றும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம்
நடிகர் விக்ரம் சிறப்பான மற்றும் முன்னணி நடிகராக தன்னுடைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவராக தற்போது உள்ளார். இந்த உயரத்தை அவர் எட்டிப் பிடித்தது அவ்வளவு எளிதான விஷயமாக அவருக்கு அமைந்து விடவில்லை. கடந்த 1990ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அவரது முதல் படம் என் காதல் கண்மணி வெளியானது.

விக்ரமின் முதல் படம்
காதலை மையமாக வைத்து வெளியான என் காதல் கண்மணி படத்தில் அழகான இளம் நாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களை குறிப்பாக பெண் ரசிகைகளை கவர்ந்தார் விக்ரம். ஆனாலும் இவருக்கு தொடர்ந்து வெற்றிகள் வசப்படவில்லை. 9 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகே சேது என்ற படத்தின்மூலம் இவர் அடையாளம் காணப்பட்டார்.

சசிகுமார் நினைவலை
இயக்குநரும் நடிகருமான சசிகுமார்கூட தனது சமீபத்திய பேட்டியில் விக்ரம் குறித்த நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டார். படையப்பா ரிலீஸ் சமயத்தில் உதயம் தியேட்டரில் படத்தின் ஸ்பெஷல் ஷோ ஒளிபரப்பானதாகவும் படத்தை பார்த்துவிட்டு நடிகர்கள் மிகுந்த வரவேற்பிற்கிடையில் வெளியில் வந்ததை விக்ரம் ஏக்கத்துடன் பார்த்ததாகவும் அவருக்கு இயக்குநர் அமீர் நம்பிக்கை கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

9 ஆண்டு போராட்டம்
இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் கிடைத்த கேரக்டர்களில் எல்லாம் நடித்தார். அவருடைய திறமைக்கு தீனிபோடும் கேரக்டர்கள் அவருக்கு அமையவில்லை. தொடர்ந்து பல நடிகர்களுக்கு டப்பிங்கும் செய்துள்ளார். தனக்கு பிடித்தமான சினிமாவைவிட்டு விலகாமல், அது தொடர்பான பல விஷயங்களை இவர் செய்துள்ளார்.

சிறப்பான அறிமுகத்தை கொடுத்த சேது
இதனிடையே பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்திருந்த சேது படம்தான் அவருக்கு சிறப்பான அறிமுகத்தை கோலிவுட்டில் கொடுத்தது. ஆனால் அதற்காக விக்ரம் பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல. படத்தில் தன்னுடைய இருவேறு கெட்டப்புகளை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் விக்ரம்.

உருக வைத்த விக்ரம்
குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் ரசிகர்கள் அனைவரையம் உருக வைத்தார் விக்ரம். இந்தப் படத்தை தொடர்ந்து கிடைத்த தனக்கான அடையாளத்தை சிறப்பாக பிடித்துக் கொண்டார். தொடர்ந்து இவரது நடிப்பில் மாஸ் படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பின.

தொடர் நடிப்பு
தற்போது விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் ஒருபுறம் நாயகனாகியிருந்தாலும் தன்னுடைய சிறப்பான இடத்தை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளார். தன்னுடைய உடலையும் நாயகனுக்கான கச்சிதத்துடன் சிறப்பாக பராமரித்து வருகிறார். சமீபத்தில் இவரது அடுத்தடுத்த படங்கள் கோப்ரா, பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன.

மிரட்டிய ஆதித்த கரிகாலன் கேரக்டர்
குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக மிரட்டியுள்ளார். ஆதித்த கரிகாலன் குறித்த உண்மையான பிம்பத்தை அறியாத ரசிகர்களுக்கு, அந்த அரசன் இப்படித்தான் இருந்திருப்பானோ என்ற நினைப்பையும் ஏற்படுத்தியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து இன்றைய தினம் தனது சியான்61 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

பா ரஞ்சித்துடன் கூட்டணி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட இந்தப் படத்தில் பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் விக்ரம். படத்தின் சூட்டிங் கடப்பாவில் இன்றைய தினம் துவங்கியுள்ளது. இதனிடையே தான் திரையில் நடிக்க துவங்கி 32 ஆண்டுகளை இன்றுடன் பூர்த்தி செய்துள்ளார் விக்ரம். இதையொட்டி ரசிகர்கள் பல்வேறு வீடியோக்களை வாழ்த்துக்களுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

32 வருட கேரியருக்கு நன்றி
இதனிடையே அத்தகைய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விக்ரம், இத்தனை வருடங்கள், அத்தனை கனவுகள், முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள், நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே என்று தெரிவித்துள்ளார். இந்த 32 வருடங்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குவியும் பாராட்டுக்கள்
இதனிடையே விக்ரமின் மேனேஜர் சூர்ய நாராயணனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்ரமிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். வெற்றித் தோல்விகளை சமமாக பாவித்து இன்றும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வரும் விக்ரம் உலகின் பல இளைஞர்களுக்கு உத்வேகம் என்று அவர் பாராட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் பலரும் விக்ரமிற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











