பகையை மறந்து தயாரிப்பாளருக்கு உதவிய விக்ரம்.. நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள்!
சென்னை: படுத்த படுக்கையாக இருக்கும் தயாரிப்பாளருக்கு நடிகர் விக்ரம் பழைய பகையை மறந்து உதவி செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விக்ரம் தற்போது, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து இருக்கிறார்.
சம்பளத்தை தரவில்லை: நடிகர் விக்ரமின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தி திரைப்படம் சேது, பிதாமகன் ஆகும். இந்த இரு திரைப்படங்களிலும் விக்ரம் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ.துரை. பிதாமகன் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு 25 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர் விஏ துரை: இதுதொடர்பான பஞ்சாயத்து நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில், தயாரிப்பாளர் வி.ஏ.துரை, கஜேந்திரா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால், மிகவும் நொடிந்து போய், வீடு வாசல் என அனைத்தையும் இழந்து, சாலிகிராமத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் வசித்து வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு காலில் புண் ஏற்பட்டு, அது கொஞ்சம் கொஞ்சமாக காலை அரித்து வந்த நிலையில் தயாரிப்பாளர் விஏ துரையின் மோசமான நிலையை காட்டி, அவரது நண்பர் மருத்துவ செலவுக்கு உதவும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

பாலா ஏமாற்றி விட்டார்: மேலும், இரண்டு வருடத்திற்கு முன் புது படத்திற்காக ரூ.25 லட்சத்தை பாலாவிடம் கொடுத்தேன். ஆனால், அவரிடம் அதை திருப்பி கேட்ட போது, அது நீங்கள் பிதாமகன் படத்திற்கு கொடுக்கவேண்டிய பாக்கி என்று கூறி எனக்கு பணம் தராமல் ஏமாற்றிவிட்டார். இப்போது நான் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் இருக்கிறேன். தயவு செய்து அந்த பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று வி.ஏ.துரை பேசி இருந்தார்.
பகையை மறந்த விக்ரம்: இதையடுத்து, அவரது மருத்துவ செலவிற்கு ரஜினி, சூர்யா, கருணாஸ் உள்ளிட்ட நடிகர்கள் உதவி செய்தனர். அவரது உடல்நிலை ஓரளவு குணமடைந்து வருகிறது. ஆனால், சர்க்கரை நோய் அதிகரித்ததால், ஒரு காலை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து செயற்கை கால் பொருத்த போதுமான பணமின்றி கஷ்டப்பட்டு வந்த தயாரிப்பாளருக்கு விக்ரம் பண உதவிகளை செய்துள்ளார். வளர்ந்து வந்த காலத்தில் 25 லட்சம் ரூபாயை தராமல் ஏமாற்றிய தயாரிப்பாளருக்கு 20 ஆண்டு பகையை மறந்து நடிகர் விக்ரம் உதவியுள்ளதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











