விலங்கு 2 வெப் சீரிஸ் எப்போது?.. விமல் வெளியிட்ட அப்டேட்
திருச்செந்தூர்: விலங்கு வெப் சீரிஸின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை நடிகர் விமல் வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் விமல். கில்லி, கிரீடம் உள்ளிட்ட படங்களில் ஒரு சில காட்சிகளில் தலைகாட்டியிருப்பார். இருந்தாலும் ஹீரோவாக நடிப்பதற்கு தொடர்ந்து முயன்று வந்தார் நடிகர் விமல்.

மெகா ஹிட்டான களவாணி
முயற்சியின் பலனாக சற்குணம் இயக்கத்தில் களவாணி படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார் விமல். சற்குணத்துக்கு அது முதல் படமாக இருந்தாலும் முதல் பட இயக்குநர் போல் இல்லாமல் படத்தின் மேக்கிங்கையும், கதையையும் அட்டகாசமாக வடிவமைத்திருந்தார். தஞ்சாவூர், ஒரத்தநாடு உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் ஷூட்டிங் நடந்தது. ஏற்கனவே விமல் டெல்டா பகுதியை சேர்ந்தவர் என்பதால் சற்குணம் உருவாக்கியிருந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அட்டகாசமாக நடித்திருந்தார். இதனால் விமலுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கவனம் ஈர்த்த வாகை சூட வா
களவாணியின் வெற்றிக்கு பிறகு மீண்டும் சற்குணத்துடன் இணைந்த விமல் வாகை சூட வா படத்தில் நடித்தார். கல்வியை அடிப்படையாக உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஆசிரியர் வேடத்தில் நடித்திருந்தார் விமல். இந்தப் படமும் விமர்சன ரீதியாக ஹிட்டாக விமலின் நடிப்பும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இந்தப் படம் தேசிய விருதையும் வென்றது. இதுவரை விமலின் நடிப்பில் வெளியான மிகச்சிற்ந்த படமாக இது கருதப்படுகிறது. இப்படி பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விமலுக்கு திடீரென பட வாய்ப்புக்கள் குறைந்தன. இதனால் ஒருகட்டத்தில் நடிக்காமலே இருந்தார் விமல்.

விலங்கு மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த விமல்
இந்நிலையில் விலங்கு வெப் சீரிஸ் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார் விமல். அந்த வெப் சீரிஸை பாண்டிராஜிடம் உதவியாளராக இருந்த பிரசாத் பாண்டிராஜ் இயக்கியிருந்தார். மொத்தம் 7 எபிசோட்களாக உருவான விலங்கு வெப் சீரிஸ், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் ஜீ5 ஓடிடியில் வெளியானது. இதில் விமல், இனியா, முனிஸ்காந்த், பாலசரவணன், மனோகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். த்ரில்லர் ஜானரில் ரூவாக்கப்பட்டிருந்த அந்த வெப் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது

திருச்செந்தூரில் விமல்
இச்சூழலில் விமல் திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், " திருச்செந்தூர் கோயிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். இப்போது 'மா.பொ.சி' என்ற புதிய படத்திலும், மைக்கேல் என்ற இயக்குநரின் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறேன். இது தவிர 'கலகலப்பு', 'தேசிங்கு ராஜா' வரிசையில் காமெடி படம் ஒன்றிலும் நடித்துவருகிறேன்.

விலங்கு 2 வெப் சீரிஸ்
இதைத்தொடர்ந்து 'விலங்கு' தொடரின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இறைவன் அருளால் நல்ல படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறேன். 'விலங்கு' இணையத் தொடருக்கு பிறகு ரசிகர்களுக்கு பிடித்த கன்டென்ட் உள்ள படங்களை தேடித்தேடி நடிக்கிறேன்.'மா.பொ.சி' 80-களில் நடக்கும் கதை. அதற்கேற்ற காஸ்டியூமில், ஹேர்ஸ்டைலில் வித்தியாசமாக உருவாகும் இப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications











