எல்லாமே சுத்தப் பொய்.. என்னைத்தான் ஏமாத்திட்டாங்க.. பண மோசடி புகாருக்கு பதிலடி கொடுத்த விமல்!
சென்னை: நடிகர் விமல் ரூ. 5 கோடியை கொடுக்காமல் கடந்த 2014ம் ஆண்டு முதல் தன்னை ஏமாற்றி வருவதாக கோபி எனும் தயாரிப்பாளர் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில், கோபி மற்றும் சிங்காரவேலன் இருவரும் இணைந்து கொண்டு தன்னை இத்தனை ஆண்டுகளாக ஏமாற்றி உள்ளதாகவும், தான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து நடிகர் விமல் கூறி உள்ளார்.
சினிமா துறையில் பண மோசடி பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், நடிகர் விமல் மற்றும் கோபி இடையே பெரிய மோதல் தற்போது நிலவி உள்ளது.

5 கோடி மோசடி
5 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு நடிகர் விமல் தராமல் இத்தனை நாளாக தன்னை ஏமாற்றியதாக காவல் நிலையத்தில் கோபி என்பவர் புகார் அளித்திருந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், உடனடியாக அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விமல் பேசி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விமல் விளக்கம்
கோபி அளித்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விமல் செய்தியாளர்களை சற்றுமுன் சந்தித்துப் பேசினார். அப்போது, 5 கோடி ரூபாய் பணத்தை தான் வாங்கவே இல்லை என்றும் தன்னை ஏமாற்றி கோபி மற்றும் அவரது நண்பர் சிங்காரவேலன் தான் இப்படியொரு சூழ்ச்சி வலையில் சிக்க வைத்துள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

என் பேரில் தயாரித்தால்
மன்னர் வகையறா படத்தை கணேஷ் என்பவர் தயாரித்து வந்தார். ஆனால், அவரால் தொடர்ந்து தயாரிக்க முடியாத நிலையில், என் பேரில் தயாரிப்பதாக போட்டால் ஃபைனான்ஸ் கிடைக்கும் என்றார்கள். நானும் அதற்கு ஒப்புக் கொண்டேன். ஆனால், நான் யாரிடமும் பணம் வாங்கி ஏமாற்றவில்லை கடந்த சில ஆண்டுகளாகவே தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்த நிலையில், தான் அவர் மீது புகார் அளித்திருந்தேன் எனக் கூறியுள்ளார்.

ஏமாந்தவன் நான் தான்
வெளியே சொன்னால் பிரச்சனை ஆகிவிடும் என்றும் இந்த விஷயத்தை அப்படியே பேசியே தீர்த்துக் கொள்ளலாம் என சிங்காரவேலன் சொன்னதை கேட்டு நான் தான் ஏமாந்து போனேன் என்றும் போலி ஆவணங்களை தயாரித்து இப்படியொரு மோசடியில் இருவரும் சேர்ந்து பணம் பறிப்பதையே தொழிலாக வைத்துள்ளார்கள் என நடிகர் விமல் குற்றஞ்சாட்டி உள்ளார்.

எங்கே போய் முடியப் போகுதோ
பண மோசடி விவகாரம் வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டால் தான் யார் சொல்வது உண்மை என்பது தெரிய வரும் என்றும், இந்த பிரச்சனை எங்கே போய் முடியப் போகுதோ என்கிற கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன. நடிகர் விமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விலங்கு வெப்சீரிஸ் பாராட்டுக்களை பெற்றது. தொடர்ந்து குலசாமி எனும் படத்தில் நடித்து வருகிறார் விமல்.


Click it and Unblock the Notifications











