Vinayakan - நெல்சன் ரொம்ப நன்றி ப்பா.. ரஜினி சார் உங்களுக்கும் நன்றி.. ஜெயிலர் வில்லன் விநாயகன் நெகிழ்ச்சி
சென்னை: Vinayakan (விநாயகன்) ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்த விநாயகம் அந்தப் படத்தில் நடித்தது குறித்து பேசியிருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் ஜெயிலர். 2.0, தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. இதன் காரணமாக கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரஜினி. அதேபோல் நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட் படத்தின் தோல்வியால் ஜெயிலர் மூலம் கம்பேக் கொடுக்க காத்திருந்தார்.

கம்பேக் கொடுத்த இருவர்: இப்படி எக்கச்சக்க எதிர்பார்ப்புகளோடு வெளியானது ஜெயிலர் படம். நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெடி பக்காவாக ஒர்க் அவுட் ஆக; ரஜினிகாந்த்தின் மாஸும், க்ளாஸும் ரசிகர்களை கவர படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த்தும், நெல்சன் திலீப்குமாரும் தரமான கம்பேக்கை கொடுத்துவிட்டார்கள் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறினர். படம் இதுவரை 600 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது.
ரஜினிக்கு கார்: கலாநிதி மாறன் ஜெயிலர் சக்சஸுக்கு பிறகு ரஜினிகாந்த்தை சமீபத்தில் நேரில் சந்தித்து செக் ஒன்றை கொடுத்தார்.அந்த செக் 100 கோடி ரூபாய்க்கானது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை நிறுத்தி ரஜினிக்கு எது பிடித்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள சொன்னார். ரஜினிகாந்த் பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 காரை தேர்ந்தெடுத்தார். அதன் விலை ஒன்றரை கோடி ரூபாய் ஆகும். அதேபோல் நெல்சன் திலீப்குமாருக்கும், அனிருத்துக்கும் போர்ஷே கார்களை பரிசாக வழங்கினார் கலாநிதி மாறன்.
வர்மன்: இதற்கிடையே படத்தில் ஏகப்பட்ட விஷயங்கள் கொண்டாடப்பட்டன. அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம். தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் விநாயகன் இதில் வில்லனாக நடித்திருந்தார். வர்மன் என்ற கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் மலையாளம் கலந்த தமிழில் பேசி நடிப்பில் மிரட்டி எடுத்துவிட்டார். இதனால் ரொம்ப வருடங்கள் கழித்து தமிழில் நடித்த விநாயகனுக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கிறது.
விநாயகன் பேச்சு: இந்நிலையில் படத்தில் நடித்தது குறித்து விநாயகன் பேசுகையில், "எனது மொபைலுக்கு தொடர்ந்து பல ஃபோன்கள் வந்துகொண்டே இருந்தன. அதுதொடர்பாக என்னுடைய மேனேஜர் என்னிடம் சொன்னார். பிறகு பேசுகையில் ரஜினிகாந்த் ஹீரோ, நெல்சன் திலீப்குமார் இயக்குநர். அந்தப் படத்தில் நடிக்கிறீர்களா என கேட்டனர். இதற்கு மேல் எதையும் கேட்க அவசியம் இல்லை. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன்.
ரஜினிகாந்த் அவ்ளோ பெரிய நடிகர். ஆனால் எனக்கு அவ்வளவு எனர்ஜி கொடுத்தார். இந்த லெவலில் இருந்துகொண்டு இப்படி ஒரு மனுஷனாக இருப்பது எல்லாம் ஒரே ஒரு மனிதர் அவர்தான். ஒரே ஒரு பாபா. ஜெயிலர் படத்தில் எனக்கு அத்தனை காட்சிகளுமே பிடிக்கும். இந்த வாய்ப்பை கொடுத்ததற்கு கலாநிதி மாறன், ரஜினி, நெல்சன் ஆகியோருக்கு நன்றி" என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











