படப்பிடிப்பு தளத்தில் விபத்து - ஸ்டண்ட் ஊழியருக்கு நடிகர் விஷால் நிதியுதவி
சென்னை: மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டு காயமடைந்த ஸ்டண்ட் ஊழியருக்கு நடிகர் விஷால் நிதியுதவி செய்திருக்கிறார்.
செல்லமே படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான விஷால்.தயாரிப்பாளரின் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்தாலும் தனக்கென திறமையை வளர்த்துக்கொண்டதால் சினிமாவில் தனித்து ஜொலிக்கிறார.

சண்டக்கோழி விஷால்
செல்லமே படம் ஓரளவு வெற்றி பெற்று படவாய்ப்புகள் அமைந்தன. அந்த சமயத்தில் விஷாலுக்கு சண்டக்கோழி படம் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. அந்தப் படத்தில் விஜய்தான் முதலில் நடிக்கவிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தில் விஷாலின் நடிப்பை பார்த்த பலரும் மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வலம் வருவார் என ஆருடம் கூறப்பட்டது. அதேபோல் அவர் நடித்த தாமிரபரணி, திமிரு உள்ளிட்ட படங்களும் ஹிட்டடித்தன.

ஹிட்டுக்காக ஏங்கும் நடிகர் விஷால்
ஆனால் சமீபமாக ஹிட் படங்கள் கொடுப்பதற்கு விஷால் ஏங்கிக்கொண்டிருக்கிறார். அவர் நடிக்கும் எந்தப் படமும் ரசிகர்களை கவராததால் உடனடியாக ஹிட் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக உழைத்துவருகிறார் அவர். சமீபத்தில் நடித்த லத்தி படமும் ஹிட்டாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி
இந்நிலையில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தில் அவருடன் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவருக்கு 33ஆவது படமாகும். இப்படத்தில் செல்வராகவனும் நடித்துவருகிறார்.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து
மார்க் ஆண்டனி படப்பிடிப்பு சென்னைக்கு அருகே ஈவிபி பிலிம் சிட்டியில் செட் போட்டு நடந்த போது கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து செட் மீது மோதி நிற்காமல் சென்றது. நல்வாய்ப்பாக செட்டில் இருந்த 100 பேரும் விபத்தை சந்திக்காமல் தப்பினர். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இரண்டாவது முறையும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து
பிப்ரவரி 22ஆம் தேதி நடந்த விபத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மார்ச் ஒன்றாம் தேதி மீண்டும் மார்க் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த முறை செட்டில் இருந்த லைட் கம்பம் ஒன்று ஸ்டண்ட் ஊழியர் தலைமேல் விழுந்தது. இதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

நிதியுதவி செய்த நடிகர் விஷால்
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஸ்டண்ட் ஊழியர் பிரபாஸ் சங்கர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்தச் சூழலில் விபத்தில் காயமடைந்த ஸ்டண்ட் ஊழியருக்கு நடிகர் விஷால் 50,000 ரூபாய் நிதியுதவி அளித்திருக்கிறார். அவரது இந்த செயல் பலரிடம் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











